சுமந்திரன் நடத்தும் குட்டி இராணுவ ஆட்சி; திருமலையில் சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப் படையினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க இராணுவ ஆட்சி என்று சொல்லுமளவுக்கு இவரே செயற்படுகிறார். இந்நிலையில் இராணுவ ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது நகைச்சுவையாக இருக்கின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளபோதிலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எவ்வித கூட்டங்களையும் நடத்தமுடியாமல் பலவீனமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.