சுதந்திரபுரம் பகுதியில் மனித எச்சங்கள் நீதிமன்ற அனுமதியுடன் அகழாய்வு

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலகர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் கடந்த 20ஆம் திகதி தோட்டக் காணியை துப்புரவு செய்த போது மனித எச்சங்கள் காணப்படுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதற்கமைய குறித்த பகுதி புதுக்குடியிருப்பு பொலிசாரினால் குற்றப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் குறித்த பகுதியில் அகழ்வாய்வுகள் செய்வதற்கான அனுமதி கோரப்பட்டு இருந்தது. அதற்கமைவாக இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அனுமதியோடு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் அகழ்வு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் போது குறித்த பகுதியில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட மண் கொட்டப்பட்டிருக்கின்ற பகுதியில் உள்ள மனித எச்சங்கள் விலங்குகள் மற்றும் மழை நீரினால் அடித்துச் செல்லப்படும் அபாயம் இருந்ததன் காரணமாக உடனடியாக குறித்த மனித எச்சங்கள் இன்று எடுக்கப்பட்டதோடு, தொடர்ந்து அகழ்வுப் பணிகள் நீதிமன்ற அனுமதியோடு செய்ய இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

அத்தோடு குறித்த பகுதியில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் தொடர்பாக நீதிமன்றமே குறிப்பிடும் எனவும், குறிப்பாக இன்றைய தினம் பணியின் போது மேலோட்டமாக காணப்பட்ட உடற்பாகங்கள் எடுக்கப்பட்ட நிலையில் நாளைய தினம் குறித்த பகுதியில் கொட்டப்பட்ட மண் மற்றும் உரிய இடங்களில் முற்றுமுழுதான தேடுதலின் ஊடாக மனித பாகங்கள் அனைத்தும் சேகரிக்கப்படவுள்ளதோடு அது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அறியமுடிகின்றது.

குறித்த இடத்தில் நீதிமன்ற தரப்பினரும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர், சட்ட வைத்திய அதிகாரி மற்றும் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பகுதியில் உள்ள தடயங்களின் அடிப்படையில் இருபது வயதிற்கு மேற்பட்ட ஆண் ஒருவரின் உடற்பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.