சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு 3 நிமிட அமைதி வணக்கம்

வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நாடு முழுவதும் 3 நிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கொரோனா தொற்றால் சீனாவில் 3,300 பேர் பலியாகினர். அவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரித்த சீனாவில் உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், நாட்டு மக்கள் அனைவரும் 3 நிமிட அமைதி வணக்கம் செலுத்தினர்.

பின்னர் கார், ரயில்கள், கப்பல்கள் ஆகியவற்றிலிருந்து ஒலி எழுப்பப்பட்டது. நாட்டின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பரக்கவிடப்பட்டது.

வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய வுஹான் நகரத்தில் போக்குவரத்து விளக்குகள் அனைத்தும் சிவப்பு நிறத்தில் எறியவிடப்பட்டது, போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

சுகாதார அவசர நிலையைக் கட்டுக்குள் கொண்டுவந்து விட்டதாக நம்பும் சீனா, கடந்த சில வாரங்களில், பயணக் கட்டுப்பாடுகள், மற்றும் சமூக விலகலுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது. சனிக்கிழமையன்று சீனாவில் 19 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதில் 18 பேர் வெளிநாட்டவர்கள்.