சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன

ஜெனீவா பிரேரணையிலிருந்து அரசாங்கம் விலகும் தீர்மானத்தைத் தொடர்ந்து, சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகளை புலம்பெயர் அமைப்புகள் மிகத் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக இராணுவத்தினரது உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அட்மிரல் சரத் வீரசேகர கூறியுள்ளார். சிறீலங்காவின் உள்ளக விவகாரத்தினை நல்லாட்சி அரசாங்கம் தங்களின் அரசியல் தேவைகளுக்காக சர்வதேச மட்டத்தில் கொண்டு சென்றது.

இந்நடவடிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பங்களிப்பினை வழங்கியது. கூட்டமைப்பினர் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு கடந்த அரசாங்கத்தில் எதிர்க் கட்சியாக இருந்து செயற்படவில்லை. மாறாக புலம்பெயர் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களின் நோக்கங்களை சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்தார்கள். காணாமல் போனோர் அலுவலகத்தில் செயற்பாடுகள் அனைத்தும் ஆரம்பத்திலிருந்து ஒரு தரப்பினருக்கு சாதகமானது என்பதைக் குறிப்பிட்டோம். எனவே சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.