சிறீலங்காவில் மேலும் ஒரு உடன்பாட்டை நாம் விரைவில் மேற்கொள்வோம் – அமெரிக்கா

சிறீலங்காவில் மேலும் ஒரு உடன்படிக்கையை நாம் விரைவில் மேற்கொள்வோம் என அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான பிரதம துணை செயலாளர் அலிஸ் வெல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவில் நாம் விரைவில் மேலும் ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளவுள்ளோம், அதில் காணிப் பதிவு, விரைவுப் பாதை அபிவிருத்தி உட்பட பல பொருளதார அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளன.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா அமைத்துள்ளது, பொருளாதார நோக்கம் கொண்டதல்ல, அது தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து நாம் எமது கவலையை தெரிவித்துள்ளோம். சீனாவின் நடவடிக்கை சிறீலங்காவின் இறைமையை பாதிக்கும்.

சிறீலங்கா மட்டுமல்ல தஸகிஸ்த்தான், மாலைதீவு, பாகிஸ்த்தான், கிரிகிஸ்த்தான் ஆகிய நாடுகளும் சீனாவின் நிதி உதவியினால் இறைமையை இழந்துள்ளன.

சிறீலங்காவில் சீனா மேற்கொண்ட பல அபிவிருத்தி நடவடிக்கைகளை எந்த பயனுமின்றி கிடக்கின்றன. 104 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட அதி உயர தொலைதொடர்புக் கோபுரம், 209 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்பட்ட மாத்தளை அனைத்துலக வானூர்தி நிலையம் என்பன எந்த பயனுமற்றவை. அங்கு விமானங்கள் வருவதில்லை.

சீனாவின் நிதி உதவியில் சிக்கிய நாடுகள் தமது இறைமைகளை இழந்து நிற்கின்றன. அதில் மியான்மாரும் அடங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.