சிறீலங்காவின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்

கடந்த வருடத்தின் முடிவுடன் சிறீலங்கா அரசின் வெளிநாட்டுக்கடன் தொகை 32.54 பில்லியன் டொலர்களாகும் என சிறீலங்காவின் வெளிநாட்டுவளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிறீலங்காவின் கடன் சுமை 32.54 பில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது. இந்த கடன் தொகைக்கு செலுத்த வேண்டிய சேவைகள் வரி 2,920 மில்லியன் டொலர்களாகும்.

அதுமட்டுல்லாது கடன் மீள் செலுத்தும் தொகையாக 1,805.7 மில்லியன் டொலர்களையும், வட்டியாக 1,114.3 மில்லியன் டொலர்களையும் சிறீலங்கா அரசு செலுத்த வேண்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதல் சிறீலங்காவின் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டுத்துறை ஆகியவற்றை அதிகம் பாதித்துள்ளதால் சிறீலங்கா அரசு கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே தான் வெளிநாட்டு பிரதிநிதிகளை இந்த வாரம் சந்தித்த சிறீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா பயணத்தடைகளை நீக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.