சிறிலங்கா – பிரித்தானிய படைகளின் “ஒப்பரேசன் ஈட்டி”

எதிர்வரும் ஒக்டோபர் 27 தொடக்கம் நவம்பர் 04 வரை 9 நாட்களுக்கு சிறிலங்கா – பிரித்தானியாவின் “ஒப்பரேசன் ஈட்டி(Operation Spear)“ என்ற பெயரில் ஓர் கூட்டு இராணுவ ஒத்திகை நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்தக் கூட்டுப் பயிற்சி தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னர் என்ற பொருளில் இடம்பெறவுள்ளது.

தீவிரவாதத்துடன் தொடர்புடைய சம்பவங்கள் நிகழ்ந்தால், தமது நாட்டவர்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பதை அறிந்து கொள்வதற்காகவே இந்தக் கூட்டுப் பயிற்சியில் பிரித்தானியா பங்கேற்கின்றது.

ஏனைய மோதல் பகுதிகளில் பிரித்தானிய படைகள் பெற்றுக் கொண்ட உளவு மற்றும் காயமுற்றோரை மீட்பது தொடர்பான அனுபவங்களை இந்தப் பயிற்சியின் போது வெளிப்படுத்துவர்.

மனிதாபிமான உதவிகள், இடர் மீட்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களை கற்றுக் கொள்வதற்காக சிறிலங்கா படையினர் இந்தப் பயிற்சியை பயன்படுத்திக் கொள்வர்.

சிறிலங்கா இராணுவத்தினர் விடுதலைப் புலிகளை எவ்வாறு தோற்கடித்தனர் என்பதை பிரித்தானய படையினர் அறிந்து கொள்வதற்கு இந்தக் கூட்டுப் பயிற்சி உதவும் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்காக சிறிலங்காவின் விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படவுள்ளன.