சிங்கள பௌத்த பேரினவத்தற்கு எதிராக கருத்துத் தெரிவித்த மூன்று சிங்கள அமைச்சர்களுக்கு தடை

முக்கியமான இரண்டு அமைச்சர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரை இனிமேல் விகாரைகளுக்கு அனுமதிப்பதில்லை என்று தென்னிலங்கையின் பௌத்த சங்கம் ஒன்று தீர்மானித்திருக்கிறது.

கம்பஹா மாவட்ட பௌத்த சங்கமே இந்த தீர்மானத்தை நேற்றிரவு மேற்கொண்டுள்ளது.

இதன்படி அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சதுர சேனாரத்ன ஆகியோரையே கம்பஹா மாவட்டத்தின் எந்தவொரு விகாரை நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லையென மாவட்ட பௌத்த சங்க சபை தீர்மானித்துள்ளது.

குறித்த மூவரும் தமது மகா சங்கத்தினரை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட காரணத்தாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்படி பௌத்த மகா சங்கச் சபை கூறியுள்ளது.