சிங்கள-பௌத்த-கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக முடியும் – வாசுதேவ

சிங்கள பௌத்தராக இருந்தால் மாத்திரம் போதாது ; கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தால் தான் ஒருவரால் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறமுடியும் என இடதுசாரி தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார் .

சிங்கள பௌத்தர் ஒருவரினால் மாத்திரம் தான் ஜனாதிபதியாக வரமுடியுமா என செய்தியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட வினாவுக்கு விடையளிக்கும்போதே அவர் சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டு வேட்பாளர் கொவிகம சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்தாலேயே வெற்றி கிட்டும் என்று குறிப்பிட்டார்.

ஆனால், உடனடியாகவே ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானதன் மூலமாக சாதி அமைப்புமுறையை தகர்த்ததையும் நினைவுபடுத்த வாசுதேவ தவறவில்லை.

ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் கூட்டு எதிரணியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான வாசுதேவ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்சவை ஆதரிக்கிறார்.

பிரேமதாச ஜனாதிபதியாக வந்ததன் மூலமாக நியதியொன்று தகர்க்கப்பட்டபோதிலும், தலைமைத்துவ வரிசை என்று வரும்போது சிங்கள — பௌத்த — கொவிகம முக்கியஸ்தர்கள் முதன்மைப்படுத்தப்பட்டு நோக்கப்படும் போக்கு இன்னமும் நிலைத்திருக்கிறது. பிரேமதாச ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி நிலவிய காலத்து சூழ்நிலை அவசியப்படுத்திய தேவையின் காரணமாகவே   ஜனாதிபதியாக வந்தார்.என்றாலும் கூட அன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் இருந்த உயர்சாதி உறுப்பினர்கள் எதிர்த்தார்கள்.

தற்போது சிங்கள -பௌத்த -கொவிகம சாதியத்தைச் சேர்ந்த ஒருவரே நாட்டின் தலைவராக வெற்றிபெற முடியும்.ஜனாதிபதியாக சிங்கள — பௌத்த — கொவிகம மாத்திரமே தெரிவுசெயயப்பட முடியும் என்ற மனநிலையே நாட்டில் நிலவுகிறது. ஜனாதிபதி பிரேமதாசவின் நியமனத்துடன் நாம் நிப்பிரபுத்துவத்தில் இருந்து வெளியே வந்தோம்.அதை மேலும் எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆராயவேண்டும் என்று வாசுதேவ கூறினார்.

கொழும்பில் சாதி முறைமை குறிப்பிட்ட அளவுக்கு  தவிர்க்கப்பட்டுவிட்டது என்பதை ஒத்துக்கொண்ட நாணயக்கார, வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் சாதிமுறைமை உறுதியானதாகவே இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இன்று சஜித் பிரேமதாச முகங்கொடுக்கின்ற பிரச்சினை போன்றே அன்று அவரின் தந்தையார் ஜனாதிபதி வேட்பாளராக முயற்சித்ததை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உயர்மட்டத்தவரும் உயர்சாதியினர் என்று சொல்லப்படுகின்றவர்களும் கடுமையாக எதிர்த்தார்கள் என்று கூறிய அவர், தேசிய உடையின் தாக்கத்தையும் மக்களின் வாக்குகளைக் கவருவதில் அந்த உடைக்கு இருக்கும் ஆற்றலையும் பற்றி குறிப்பிடுகையில், ” அந்த உடை மக்களின் அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதால் தாக்கம் ஒன்றைக் கொணடிருக்கிறது.

மக்கள் தனிப்பட்ட முறையில் தாங்கள் தேசிய உடையை அணிவதில் ஆர்வத்தைக் காட்டுவதில்லை என்ற போதிலும், தங்களது தலைவரின் ஊடாக தேசிய அடையாளம் வெளிக்காட்டப்படுவதை விரும்புகிறார்கள்” என்று விளக்கமளித்தார்.

சிங்கள பௌத்த தலைவர் ஒருவர்தான் நாட்டுக்கு தேவையா என்று நாணயக்காரவிடம் கேட்டபோது, ” எமக்கு சிங்கள பௌத்த தலைவர் தேவையில்லை, சகல இனங்களையும் சேர்ந்த மக்களினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய  இலங்கைத் தலைவரே தேவை.

எவ்வாறெனினும், சிங்கள பௌத்தர்களே நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையினராக இருப்பதால், தேரர்தல் ஒனறில் சிங்கள பௌத்தர்களின் முன்னிபந்தனை இல்லாமல் தலைமைத்துவத்தைக் கட்டியெழுப்புவது கஷ்டமான காரியமேயாகும்.எனவே, சிங்கள பௌத்த சக்திகளின் செல்வாக்கு இல்லாமல், முழு நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர் ஒருவரைக் கொண்டுவருவது கஷ்டமானதேயாகும் ” என்று பதிலளித்தார்.

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு சொந்தமானதாக இருக்கக்கூடாது.ஆனால், பிரதானமாக அவர்களே பெரும்பான்மையினராக ஆதிக்கநிலையில் இருப்பதால் அவர்களின் கலாசாரத்தின் செல்வாக்கிற்கு உட்பட்டதாக இருக்கிறது.

சிங்கள பௌத்தர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மையினராக இருப்பதால், சிங்கள பௌத்தத்தின் மீது அதன் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டிருப்பதால் அந்த நியமங்களை நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளவேண்டும்.

ஆனால், அந்த காரணத்துக்காக இலங்கை சிங்கள பௌத்தர்களுக்குத்தான் சொந்தமானது என்று நாம் உரிமைகோரக்கூடாது என்றும் 80 வயதான நாணயக்கார கூறினார்.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோதாபய நியமிக்கப்படுவதை நாணயக்கார முன்னர் எதிர்த்துவந்தார். இப்போது அவரே வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.அது குறித்து கேட்டபோது கோதாபயவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர் மீதான தனது கண்டனப்பார்வை மாறிவிட்டது என்று பதிலளித்தார்.