சட்டவிரோத குடியேறிகளை காலில்சுட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால், அதைத் தடுக்க அதிபர் ட்ரம்ப் பல முயற்சிகளை எடுத்து வருகின்றார். அவற்றிற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகின்றது. சட்டவிரோதமாக குடியேறும் குடும்பங்களைப் பிரித்து தனித்தனி முகாம்களில் அடைக்க அவர் உத்தரவிட்டதற்கு மற்றும் மெக்சிக்கோ எல்லையில் மிக உயரத் தடுப்புச் சுவர் அமைக்க முற்பட்டதற்கு எல்லாமே எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்த சட்டவிரோத குடியேறிகளின் தடுப்பு குறித்து பல முறை அதிகாரிகளுடன் அதிபர் ட்ரம்ப் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார். அந்த சந்திப்புக்கள் குறித்த விபரங்களை அமெரிக்க செய்தி ஊடகமான த நியுயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சந்திப்பில் அப்போதைய உள்நாட்டு பாதுகாப்பு செயலர் கிரிஸ்டொஜென் நெல்சன, மாநிலச் செயலர மைக் பாம்பியோ, எல்லை பாதுகாப்புத் தலைவர் கெவின், மிக் முலவனேய் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது ட்ரம்ப் அதிகாரிகளிடம், “நீங்கள் என்னை முட்டாளாக்க காட்ட முயல்கின்றீர்கள், எனக்கு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்பது தெரியும்.

நாட்டின் தெற்குப் பகுதியில் இத்தகைய ஊடுருவல் மற்றும் நாட்டைக் கைப்பற்றும் முயற்சி நடந்து வருகின்றது. அதிகாரிகளாகிய நீங்கள் அனைவரும் உங்கள் மெக்சிகோ நண்பர்களைக் காக்க முயல்கின்றீரக்ள். நான் அதை அனுமதிக்க மாட்டேன். இனி எல்லை வழியாக வருபவர்களை காலில் சுட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையொட்டி அந்தக் கூட்டத்தில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ட்ரம்ப் அந்த உத்தரவை நீக்கியதாகவும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.