எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தாண்டி, யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவான் தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் தமிழர்களைக் கொன்றொழித்த கோத்தபயா ராஜபக்ஸ ஆட்சிக்கு வந்தால் நாம் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும். அதனால் தற்போதுள்ள நிலையை கருத்திற் கொண்டு, சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களிக்க வேண்டும்.
வட்டுக்கோட்டையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கோத்தபயா ராஜபக்ஸ வரமுன்னரே மணியடித்து விட்டார். அவர்களுக்கு போரில் மரணித்த விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளாக இருக்கலாம். ஆனால், அவர்கள் எமக்கு மாவீரர்களே. நாம் அவர்களை அஞ்சலிப்பது 16ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முடிவிலேயே இருக்கின்றது.
கோத்தபயா ராஜபக்ஸவினர் செய்தவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழர்களுக்கு விரோதியாக செயற்பட்டவர் கோத்தபயா. ராஜபக்ஸ தரப்பினர் இன்னும் பலவற்றை செய்துள்ளனர்.
ஒரு வார்த்தையில் கூறுவதானால், கோத்தபயா ஆட்சிக்கு வந்தால் இன்னொரு முள்ளிவாய்க்கால் ஏற்படும் என்று சிந்திக்க வேண்டும்.
2009ஆம் ஆண்டில் முள்ளிவாய்க்கால் அவலம் யாரால் ஏற்பட்டது? இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இன்று தமக்கு எதுவும் தெரியாது என்று கோத்தபயா தரப்பினர் கைவிரிக்கின்றனர்.
அப்போது 10 வயதாக இருந்தவர்களுக்கு எதுவும் தெரியாது. அவர்களுக்கு சரியான விளக்கம் இல்லை. தேர்தல் பேச்சுக்களை நம்பி திரிகின்றனர். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் கைவிடப்படுவார்கள்.
கோத்தபயாவிற்கு யாழில் ஆதரித்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.
சர்வதேச நாடுகள் முழுமையாக எம்முடன் நிற்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. அந்த நாடுகளுக்கும் வரைமுறைகள் உள்ளன. இவற்றைத் தாண்டி அந்த நாடுகள் செயற்பட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுதான் இன்றைய நிலைமை.
நல்லவரை தெரிவு செய்ய வேண்டும். ஆனால் கெட்டவர்களை ஒதுக்குங்கள். தற்போதுள்ள நிலைமையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்“ என்று கூறினார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொருளாளர் கனகசபாபதி, வலிகாமம் மேற்குப் பிரதேச சபைத் தவிசாளர் நடனேந்திரன், வலிகாமம் தென்மேறகுப் பிரதேச சபைத் தவிசாளர் ஜெபநேசன், நடாளுமன்ற உறுப்பினர் சரவணபவனின் இணைப்பாளர் பிரதாப், வட்டுக்கோட்டைத் தொகுதியின் இளைஞர் அணித் தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள், வட்டுக்கோட்டைத் தொகுதிப் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.