கொழும்பில் கடத்தப்பட்ட 11 தமிழர்கள் குறித்து சி.ஐ.டி யினர் அதிர்ச்சித் தகவல்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் சி.ஐ.டியினர் அதிர்ச்சித் தகவலை வழங்கியிருக்கின்றனர்.

குறித்த 11பேரும் திருகோணமலை கடற்படை முகாமின் கன்சைட் நிலத்தடி சித்திரவதை முகாமிற்குள் சுட்டக் கொல்லப்பட்டிருக்கலாம் என சி.ஐ.டியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இதற்காக எம்.பி.5ரக இயந்திரத் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும், இந்த முகாமில் இடம்பெற்ற கொலைகள் குறித்து உறுதியான முடிவிற்கு வர கோட்டை நீதவான் ரங்க திஸநாயக்கவிடமிருந்து அனுமதி பெற்று, தற்போது மருத்துவ பகுப்பாய்வு மற்றும் இரசாயன பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சி.ஐ.டி ஈடுபட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம், கன்சைட் வதை முகாமிற்கு பொறுப்பாகவிருந்த கொமாண்டர் ரணசிங்கவின் கீழ் இருந்த விசேட உளவுப் பிரிவு ஒன்றினால்  முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என தமக்குக் கிடைத்த வாக்குமூலங்களின் பிரகாரம் நம்பப்டுகின்றது. இது குறித்து விசாரணைகள் நடைபெறுவதாகவும் சி.ஐ.டியின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.