கொரோனாவை’ சாதகமாக்கும் சிறிலங்கா அரசாங்கம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் !

உலக மனிதகுலத்திற்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் நெருக்கடிநிலையினை தனக்கு சதகமாக்கி சிறிலங்கா அரசாங்கம் நடந்து கொள்வதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டம் தெரிவித்துள்ளது.

சிறிலங்காவின் சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் உயிர்ப்பாதுகாப்பு தொடர்பிலும், சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் தமிழர்களை படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை தொடர்பிலும் இருவேறு ஊடகச் செய்திகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.

https://www.einpresswire.com/article/513151974/taking-advantage-of-coronavirusn-crisis-sri-lanka-pardons-a-soldier-sentenced-to-death-for-killing-tamil-civilians-tgte

சிறைகளில் வைக்கப்பட்டுள்ள தமிழ்போர்கைதிகளின் (அரசியற்கைதிகள்) உயிர்பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்துமாறு, சிறிலங்காவின் ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும், இந்தியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச செங்சிலுவைச் சங்கத்துக்கும் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ்போர்கைதிகள் சிறிலங்கா அரசின் பின்புலத்துடன் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டலாம் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

தமிழ்போர்கைதிகளுக்கு நெருக்கமான வட்டாரங்களின் தகவல்களில், கொரோன வைரஸ் தொற்று தொடர்பில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தின் போது, சிங்கள கைதிகள் தமிழ்போர்கைதிகளை தங்களுடன் இணைந்து வருமாறு அழைத்திருந்ததாகவும், இதற்கு தமிழ்கைதிகள் மறுத்திவிட்ட நிலையில், தமிழ்கைதிகள் மீது சிங்கள கைதிகளுக்கு வெறுப்பு நிலைகாணப்படுவதாகவும் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த வெறுப்புணர்வை பயன்படுத்தி சிங்கள கைதிகள் ஊடாக தமிழ்கைதிகளை படுகொலை செய்யலாம் என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

1) 1983ம் ஆண்டு வெலிக்கடை சிறையில் 53 தமிழர்கள் படுகொலை
2) 1997ம் ஆண்டு களுத்துறை சிறையில் 3 தமிழர்கள் படுகொலை
3) 2000ம் ஆண்டு பிந்துனுவேவ சிறையில் 26 தமிழர்கள் படுகொலை

சிறைக்கூடங்களில் சிங்கள கைதிகளை ஏவிவிட்டு தமிழர்களை படுகொலை செய்த சம்பவங்கள் சிறிலங்காவின் கடந்த கால வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளாக பதிவாகியுள்ளன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியுள்ளது.

இதேவேளை, சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த போர்குற்றவாளி சுனில் இரத்திநாயக்கா விடுதலை செய்யப்பட்டுள்ளமையானது, சிறிலங்காவில் நீதிக்கானவெளி தமிழர்களுக்கு இல்லை என்பதனை வெளிக்காட்டுவதாக குறிப்பிட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, அனைத்துலக நீதிமன்றத்திலோ நிறுத்தவதன் ஊடாகத்தான் தமிழர்களுக்கான நீதியினைப் பெறமுடியும் எனத் மற்றைய ஊடகச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மனிதஉயிர்களுக்கு அச்சுறுத்தலாக பாரிய நெருக்கடி நிலையினை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனை தனக்கு சாதகமாக்கிய ஒரே அரசு என்ற இடத்தினை ‘சிறிலங்கா’ பிடித்துள்ளது என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.