குற்றவாளிகளை தண்டிக்க இடமளிக்க வேண்டும்: அமெ தடை குறித்து சுமந்திரன்

“யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா மீதான அமெரிக்காவின் பயணத் தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனத் தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், “பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுமந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

“இலங்கை இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவும் அவரது குடும்பத்தினரும் ஐக்கிய அமெரிக்க இராஜ்யத்தினுள் நுழைவதை அமெரிக்கா தடை செய்து கட்டளை பிறப்பித்துள்ளது.

போரின் இறுதிக்கட்டத்திலே இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் மனித உரிமை மீறல்கள் ஆக்கியவற்றிக்கான ஆதாரங்களின் அடிப்படையில் 58வது பிரிவின் கட்டளை தளபதியாக இருந்த ஷவேந்திர சில்வா பொறுப்பு கூறவேண்டியவராகின்றார்.

ஷவேந்திர சில்வா இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட வேளை மேற்குறித்த அதே காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவரது நியமனத்தினை கண்டித்திருந்தது.

யுத்தம் முடிவடைந்து ஒரு தசாப்த காலமாக பொறுப்புக்கூறலை தட்டிக்கழித்து வந்த இலங்கை அரசாங்கங்களின் கண்களை இத்தடை திறக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நீதிக்காக பல வருடங்கள் போராடியதன் விளைவால் இடம்பெற்ற சிறியதொரு முன்னேற்றமாக இதை நாம் காண்கின்றோம்.

இலங்கை அரசாங்கம் இனிமேலாவது சர்வதேச விசாரணைகளில் வெளிவந்த சாட்சியங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு இடங்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தி நிற்கின்றது.”