கீழடி அகழாய்வில் அகரத்தில் 20 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு

கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 6ஆம் கட்ட கீழடி அகழாய்வில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் உள்ள அகரம் என்ற இடத்தில் கடந்த வியாழக்கிழமை 20 அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வில் கீழடியின் அருகிலுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் 3ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள், கட்டிட அமைப்புகள், சுவர்கள், வடிகால் வசதி, மனிதர்களின் எலும்புகள், விலங்கு வகை எலும்புகள் மற்றும் குறைந்த அடுக்குக் கொண்ட உறை கிணறுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் இந்த அகழாய்வுப் பணிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 20 அடுக்குகளுக்கும் மேல் உள்ள வட்ட வடிவான உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 6ஆம் கட்ட அகழாய்வில் கிடைத்த உறைகிணறுகளின் உயரத்தை விட தற்போது இங்கு கிடைத்துள்ள உறைகிணறு அதிக உயரம் கொண்டதாக உள்ளது. இந்த உறைகிணறு கிடைத்த இடத்தில் தோண்டப்பட்டு வரும் குழியில் ஆழத்தின் அளவு அதிகரிக்கப்படும் போது, உறைகிணறின் அடுக்குகளும் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.