கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்

தமிழ்நாடு மதுரை அருகேயுள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழக சங்ககாலம் என்பது மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படுவது மதுரை நகரமாகும். வரலாற்றிற்கு முன்னரான காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வசித்து வரும் வெகுசில நகரங்களில் இதுவும் ஒன்று. மதுரையிலும், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பல தொல்லியல் சின்னங்கள் இப்போதும் இருந்து வருகின்றன.

மதுரையைச் சுற்றியுள்ள சமணர் படுகைகளில் கி.மு.500 முதல் கி.பி.300 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல எழுத்துக்கள் காணப்படுகின்றன. மதுரைக்கு வடக்கில் சில கற்காலக் கருவிகளும் ஆவியூரில் பழங்கற்காலக் கருவி ஒன்றும் பிரிட்டிஷ் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன. 1987 ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை உத்தமபாளையத்தின் எல்லப்பட்டி என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வில் இரும்பு உருக்கும் தொழில்கூடப் பகுதி இருப்பது வெளியில் கொண்டு வரப்பட்டது.

Tamils write 1 கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்இந்திய விடுதலைக்கு  முன்பாக அலெக்ஸான்டர் ரீயா மதுரைக்கு அருகில் உள்ள பரவை, அனுப்பானடி பகுதிகளில் அகழ்வாய்வு நடத்தினார். 1976இல் டி.கல்லுப்பட்டியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல், அழகன் குளம், மாங்குளம் பகுதிகளில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டது.

இந்தப் பின்னணியில் தான் இந்திய தொல்லியல்துறை வைகை நதிக்கரையின் இரு பக்கங்களிலும் உள்ள 293 இடங்களில் கள ஆய்வு நடத்தி, பெருங்கற்காலத் தாழிகள், கல்வெட்டுகள், பண்டைய வாழ்விடப் பகுதிகள் கண்டறிந்தது. இதில் ஒரு இடம் தான் கீழடி.

இந்த அகழ்வாய்வுப் பகுதி 110 ஏக்கர் பரப்பளவுள்ள, அதிக சிதைவில்லாத ஒரு  தொல்லியல் மேடு. இங்கே இந்திய தொல்லியல் துறை 2015, 16, 17 ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு மேற்கொண்ட நிலையில், 2017 – 18, 2018 – 19ஆம் ஆண்டுகளில் தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாய்வு மேற்கொண்டது.

இதில் 2017 – 18ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட நான்காம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் தான் இப்போது வெளியாகியுள்ளன. தற்போது ஐந்தாம் கட்ட ஆய்வு தற்போது நடந்து வருகின்றது.

தற்போது வெளியாகியிருக்கும் கீழடி அகழ்வாய்வு முடிவுகளின் மிகப் பெரிய முக்கியத்துவமாக சில விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.

Tamils write கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்இப்போது கீழடியில் கிடைத்திருக்கும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள், கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்பதால், தமிழ் பிராமி எழுத்துக்களின் காலம் மேலும் ஒரு நூற்றாண்டு பழமையானது என்ற முடிவிற்கு இது இட்டுச் செல்கின்றது.

இரண்டாவதாக, தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில் இதுவரை நகர நாகரிகத்திற்கான அடையாளங்கள் கிடைத்ததில்லை. ஆகவே கி.மு ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருந்ததைப் போன்ற ஒரு நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்றே கருதப்பட்டது.

ஆனால் கீழடியில் சுட்ட செங்கற்களால் ஆன வீடுகள், கழிவுநீர் போக்கிகள், சுவர்கள், உறை கிணறுகளுடன் கூடிய ஒரு பகுதி தோண்டியெடுக்கப்பட்டிருப்பதால், இது ஒரு நகர நாகரிகமாகவே கருதப்படுகின்றது. இது தமிழகத்தில் கிடைத்த நகர நாகரிகத்தை சுட்டும் ஆதாரம் என்பதோடு,  கங்கைச் சமவெளி  நாகரிக காலகட்டத்திலேயே இங்கேயும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வு மூலம் நிறுவ முடியும்.

மூன்றாவதாக பானை ஓடுகளில் காணப்படும் பெயர்கள் பானைகள் சுடப்பட்ட பின்னர், அதில் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால் அவை அந்தப் பானையை வாங்கியவர்களால் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. வெவ்வேறு பானைகளில் வெவ்வேறு விதமான எழுத்து அமைந்திருப்பதால், பலரும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.

பத்து என்ற எண்ணைப் பெறுவதற்கு உருட்டப்படும் பகடைக்காய்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை கீழடியில் கிடைத்திருக்கும் பகடைக்காய்கள் காட்டுகின்றன. தற்போது தாயத்தில் உருட்டப்படும் தாயக் கட்டைகள் நான்கு பக்கங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றை உருட்டுவதால் ஒருபோதும் பத்து என்ற எண்ணைப் பெறமுடியாது.

ஆனால் கீழடியில் கிடைத்திருப்பது போன்ற ஆறு பக்கங்களைக் கொண்ட பகடைக் காய்கள் பத்து என்ற எண்ணை தரக்கூடியவை.

“சங்க இலக்கியமான கலித்தொகையில் சொல்லப்படுவது போன்ற தாயக்கட்டைகளே இங்கு கிடைத்திருக்கின்றன. சங்க காலத்தையும், கீழடியையும் இதை வைத்து இணைத்துப் பார்க்க முடியும்”  என்று ரோஜா முத்தையா நூலகத்தில் உள்ள சிந்துவெளி ஆய்வு மையத்தின்        இயக்குநரான ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கீழடி 4ஆம் கட்ட அகழ்வாய்வில் மட்டும் இதுபோல 600 விளையாட்டுப் பொருட்கள் கிடைத்துள்ளன. இவை ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் விளையாடக்கூடியவை. விளையாட்டிற்கு நேரம் ஒதுக்கும் அளவிற்கு வேலைகளை நேர ஒதுக்கீடு செய்து கொண்ட சமூகமாக அங்குள்ளவர்கள் இருந்திருக்கக்கூடும் என்பதற்கான ஆதாரமாக இந்தக் காய்கள் இருக்கின்றன.

சங்க இலக்கிய பாடல்கள் அந்தக் காலத்து மண்ணையும் மனிதர்களையும் பாடின. அந்தப் பாடல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை இங்கே கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. சங்ககாலப் பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூகம் மிக உயர்ந்த நாகரிகம் கொண்டதாகத் தென்படுகின்றது. அப்படி ஒரு நாகரிகம் இருந்திருந்தால்,  அதற்கு ஆதாரமாக கீழடி இருக்கின்றது என்றார் ஆர். பாலகிருஷ்ணன்.

மற்றொரு விடயத்தையும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகின்றார். சிந்து சமவெளி குறியீடுகளுக்குப் பின்னர் தமிழ் பிராமி உருவாவதற்கு முன்பாக கீறல்கள் பானைகளில் எழுதப்பட்டுள்ளன. சிந்து வெளிக் குறியீடுகளைப் போலவே இந்த கீறல்களையும் படிக்க முடியவில்லை. இம்மாதிரியான பானைக் கீறல்கள் இந்தியாவிலேயே அதிகம் கிடைத்திருப்பது தமிழ்நாடு கீழடியில் மட்டும் தான். கீழடியில் 1001 பானைக் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. இது எழுத்து உருவாவதைக் காட்டுகின்றது. இம்மாதிரியான கீறல்கள் கங்கைச் சமவெளியில் பெரிதாகக் கிடைக்கவில்லை என்றார் அவர்.

மேலும் கீழடியில் வழிபாட்டிற்குரிய உருவங்கள் என குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால், இதற்குப் பொருள், அங்கு வசித்தவர்கள் எதையும் வணங்கவில்லை என்பதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மாதிரி வணங்குவதும் சமயச் செயற்பாடுகளும் அவர்கள் வாழ்வின் முக்கிய பகுதியாக இருக்கவில்லை என்பதை தான் இது சுட்டிக்காட்டுகின்றது. “சங்க இலக்கியத்தில் நிறைய பெண் தெய்வங்கள் உண்டு. ஆனால், கீழடியில் வாழ்ந்த பழங்கால மக்கள் அவற்றைச் சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ளவில்லை என்ற முடிவிற்கு வரலாம்“ என்கிறார் பாலகிருஷ்ணன்.