கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மன்னார் ஓலைத் தொடுவாயில் 508 ஏக்கர் காணி சுவீகரிப்பு

மன்னார் ஓலைத் தொடுவாய் உவரிப் பகுதியில் உள்ள 508 ஏக்கர் காணி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

குறித்த காணி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அந்தப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், யுத்தம் முடிவடைந்த பின்னர் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர், பொதுமக்களின் காணிகளை அடாத்தாக கொள்வனவு செய்துள்ளனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தவர்கள், மற்றும் யுத்தம் காரணமாக இந்தியா சென்றவர்களின் காணிகள் இதில் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

குறித்த ஒரு தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்த காணியை ஆளுநர் ஹிஸ்புல்லா கொள்வனவு செய்துள்ளார். இந்த நிறுவனத்தின் இயக்குநராக ஹிஸ்புல்லாவே இருக்கின்றார்.

இதற்குரிய நிதி எங்கிருந்து பெறப்பட்டது. இந்த அரசியல்வாதிக்கு எந்த அரபு நாட்டிலிருந்து நிதி வந்தது போன்ற விபரங்களை அரச தரப்பினர் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டுமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேட்டுள்ளார்.

இதே போன்று மட்டக்களப்பில் பல்கலைக்கழகம் ஒன்று ஜனாதிபதியினால் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அதற்கு சவுதியைச் சேர்ந்த  தனிப்பட்ட நபர் ஒருவர் ஹிஸ்புல்லாவிற்கும் அவரது மகனுக்கும் சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு பெரும் தொகை பணம் அனுப்பியிருக்கின்றார். இந்தப் பணத்தின் மூலம் பல்கலைக்கழகம் கட்டப்பட்டுள்ளது.தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் மத தீவிரவாத அமைப்புக்களால் கிறிஸ்தவர்கள் இலக்கு வைத்து தாக்கப்படுகின்றார்கள்.

மன்னார் உவரி கிராமமும் ஒரு கிறிஸ்தவ கிராமமாகும். இந்தப் பகுதியில் வசித்த மக்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவிலும், வேறு இடங்களிலும் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பிரதேசம் கிறிஸ்தவர்களின் பிரதேசம் என்பதற்கு சான்றாக 500 வருடங்கள் பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இங்கு இருக்கின்றது.

ஹிஸ்புல்லா என்ன நோக்குடன் இப்பகுதி காணிகளை ஆக்கிரமித்துள்ளார் என்பதை அரச புலனாய்வுத் துறையினர் ஆராய வேண்டும் என்றும் நிர்மலநாதன் கேட்டுள்ளார்508 ஏக்கர் என்ற போர்வையில் 900 ஏக்கர் காணிகளை அடைத்து வைத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.