கிளிநொச்சி மாவட்டத்தில் 500 ஏக்கர் நிலத்தை விடுவிக்க இணக்கம்

சிறிலங்கா படையின் கையகப்படுத்திவைத்துள்ள காணிகளில் 500 ஏக்கர் பகுதியை விடுவிக்க சிறிலங்கா பிரதமர் இணங்கியதாக தெரியவருகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறிலங்காபிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்றது.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா உட்பட்ட பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

பிரதமருடன் முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பிரதமரிடம் எழுத்துமூலமாக குறிப்பிட்டிருந்த விடயங்கள் தொடர்பாக பேசுவதற்காகவே இச் சந்திப்பு இடம்பெற்றது.