கிளிநொச்சியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் பேரணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், கிளிநொச்சியில் இன்று(30) மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் என்று ஒருவரும் இல்லை. அவர்கள் எல்லோரும் யுத்தத்தின் போது இறந்து விட்டனர் என கோத்தபயா ராஜபக்ஸ கூறிய கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டிம்  இந்தப் பேரணி நடைபெற்றது.

போராட்டத்தின் போது, எங்கே எங்கே எது உறவுகள் எங்கே? ஜனாதிபதியே தாங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போதே எங்கள் உறவுகளை கையளித்தோம். அவர்கள் எங்கே? சர்வதேசமே இலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து. இரவோடு இரவாக OMP அமைத்து இலங்கை அரசு எதனை சாதிக்கப் போகின்றது? கடத்தாதே கடத்தாதே எமது உறவுகளை இனியும் கடத்தாதே. கையளிக்கப்பட்ட சிறுவர்கள் எங்கே? போன்ற பதாதைகளை ஏந்தியவாறு  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், செ.கஜேந்திரன், வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர்களான சர்வேஸ்வரன், ஐங்கரநேசன், பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.