கால்களை இழந்தரை கைது செய்த பொலிஸ் சித்திரவதை ; ஆணைக்குழுவில் முறைப்பாடு

இரண்டு கால்களையும் இழந்த சிறப்புத் தேவையுடையவரைப் பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்தனர் எனவும், அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கினர் எனவும் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிரீமலைப் பகுதியில் கடந்த 24ஆம் திகதி இரவு 11 மணியளவில் ஊரடங்கு நடைமுறையில் இருந்தவேளை இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றினை அடுத்து அவ்விடத்திற்கு விசாரணைக்காக வந்திருந்த காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் மு.உதயானந்தன் (வயது 35) தலைமையிலான பொலிஸ் குழுவினர் மோதலில் ஈடுபட்ட நபர்களை அடை யாளம் கண்டு அவர்களை கைது செய்ய முயன்றபோது , உப பொலிஸ் பரிசோதகர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த மேலதிக பொலிஸார், உப பொலிஸ் பரிசோதகர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் சிறப்புத் தேவையுடையவரைக் கைது செய்திருந்தனர கைது செய்யப்பட்ட நபர் மறுநாள் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் செல்ல நீதிவான் அனுமதித்திருந்தார்.

இந்த நிலையிலையே, அன்றைய தினம் இரவு தம்மை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து கிளுவம் தடியால் மூர்க்கத்தனமாகத் தாக்கினர் எனவும், சம்பவத்துடன் தொடர்பில்லாத தன்னைப் பொய்க் குற்றசாட்டு சுமத்தி கைது செய்து தாக்கிச் சித்திரவதை புரிந்தனர் எனவும் பாதிக்கப்பட்ட நபர் நேற்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டைக் கையளித்துள்ளார்.