காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான மற்றுமொரு சாட்சியையும் இழந்து நிற்கின்றது தமிழினம்!

இது வரை காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி வீதி வீதியாக அலைந்து சிங்கள அரசினால் ஏமாற்றப்பட்டு, தமிழ் பிரதிநிதிகள் மீது நம்பிக்கையிழந்து எந்த வித அடிப்படை தீர்வுகளையும் பார்க்காமலே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 38 பேர் உயிரிழந்துள்ளதாக வடக்கு கிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

புதுக்குடியிருப்பு, இரணைபாலையை சேர்ந்த திருமதி செபமாலைமுத்து திரேசம்மா 24.07.2019 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவரது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவர் 01.07.2008 அன்று இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டார், இந்நிலையில் கடந்த 11 வருடங்களாக தனது மகனை தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு உடல் உள ரீதியாக பாதிக்கப்பட்டு 24.07.2019 அன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்திற்கும் அவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடக்கு கிழக்கு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் அவரது மகனை எமது உறவாகக்கொண்டு அவருக்கான நீதியை பெற்றுக்கொடுக்க உத்வேகத்துடன் போராடுவோம் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.

மேலும் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த கனகரத்தினம் காந்தமலர், சபாரத்தினம் மனோன்மணி, தெய்வேந்திரன் இந்திரா, நாகராசா சிவமணி, சாமிதம்பி திரவியம் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சுந்தரம்பிள்ளை அருந்தவம், தவரட்ணம் பத்மாவதி, ராமன் கமலம், வீரகத்தி அமிர்தலிங்கம், சொக்கன் பரமேஸ்வரி, சுந்தரம் லெட்சுமிப்பிள்ளை, நாகராசா சிவசோதி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த பரமசிவம் தெய்வஈஸ்வரி, மகேந்திரன் உதயராணி, லவநீதன் இளவரசி, தம்பிமுத்து அமரசிங்கம், அழகிப்போடி சந்திரசேகரம், சந்திரசேகரம் ஞானசௌந்தரி, யாழ் மாவட்டத்தை சேர்ந்த மாசிலாமணி புஸ்பராணி கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்த கனகரத்தினம் மகேஸ்வரி, பாவிலு சந்தியோகு, மரியான் சரோரூபன் குருஸ், கனகரத்தினம் மகேஸ்வரி, வைத்தியலிங்கம் யோகரட்ணம், ஈஸ்வரன் உருத்திராதேவி, துரைசிங்கம் ஈஸ்வரி, சிதம்பரப்பிள்ளை யோகராசா மற்றும் அரசியல் கைதியான தனது கணவனை விடுதலை செய்யக்கோரி எம்முடன் இணைந்து போராடிய ஆனந்தசுதாகர் யோகராணி மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ஜசிந்தா பீரிஸ், வவுனியா மாவட்டத்தை சேர்ந்த கந்தையா அரியரத்தினம், அரியதாஸ் புவனேஸ்வரி முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த அன்ரன் அல்பிரட், செபநாயகம் மரியமலர், செபஸ்ரியான்பிள்ளை ஆரோக்கியநாதன், ச.விஜயலட்சுமி, கோணமலை பொன்னம்பலம், வேலு சரஸ்வதி, செபமாலைமுத்து திரேசம்மா ஆகியோரின் (இங்கு வழங்கப்பட்ட மரணமானவர்களின் விபரமானது எமது அமைப்பில் பதிவு செய்யப்பட்ட தரவுகள் மட்டுமே. எமது பதிவுகளுக்குட்படாதவர்களின் எண்ணிக்கை இங்கு சுட்டிக்காட்டியதை விட அதிகமாக இருக்குமென கணிப்பிடுகின்றோம்) மரணத்துடன், எமது உறவுகளை மீட்பதற்காக போராடி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள நிலையிலும் இலங்கை சிங்கள அரசாங்கமோ சர்வதேச சமூகமோ எமக்கான நீதியை விரைவில் பெற்றுத்தருவதற்கு முயலாமையினையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது போராட்டமானது எமது உறவுகளை மீட்டல், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிதல், நீதியை பெறல் என்பவற்றுடன் இனிவரும் காலங்களில் எமது சமூகத்திற்கு மட்டுமல்லாமல் மனித குலத்திற்கே இவ்வாறான பிரச்சனைகள் நிகழாதிருக்கவுமேயாகும். ஆயினும் எமது போராட்டமானது மிக கடினமானது ஏனெனில் எமக்கான நீதியை பக்கச்சார்பற்று வழங்கக்கூடிய சர்வதேச பொறிமுறையை கட்டமைக்கவும் , நீதியை பெற்றுக்கொள்ளவும் கடுமையாக போராடவேண்டிய நிலை காணப்படுகின்றது.

மனித குலத்திற்கான நீதியானது நபர்களின் எண்ணிக்கை சார்ந்தோ (பெரும்பான்மை) பாதிக்கப்பட்டவர்களிடமுள்ள வளங்கள் சார்ந்தோ அல்லது நீதி வழங்குனர்கள் மற்றும் நீதி வழங்குனர்களின் பங்காளிகளின் தேவையின் அடிப்படையிலோ அமையுமெனின் அதன் பெயர் நீதியன்று. ஆயினும் இன்றைய காலத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிப்பொறிமுறைகள் மேற்கூறப்பட்டதன் அடிப்படையில் இடம்பெறுவதாக நாம் உணர்ந்ததன் விளைவாக உளச்சோர்வுக்கும் நோய்களுக்கும் உள்ளாகி மரணத்தை தழுவிக்கொண்டிருக்கின்றோம்.

2004-இல் சந்திரிக்கா அம்மையாரால் உருவாக்கப்பட்ட அதிபர் செயலக ஆணைக்குழுக்களாளோ 2013-இல் மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவினாலோ தற்போதைய ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோருக்கான அலுவலகம் , சிங்கள சார்பு நிலை உள்ளக நீதி நிறுவனங்கள் ஆகியன எமக்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை , பெற்றுக்கொடுக்கப்போவதுமில்லை என்பதுடன் கால தாமதங்கள் ஊடாக உறவுகளை தேடுபவர்களை உடல் உள ரீதியாக பலவீனப்படுத்தி உயிரிழக்கவும் காரணமாக உள்ளன. அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகளானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் வகையில்லல்லாது அரசியல் நலன்களுக்காக எமது பிரச்சனைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன, மாறாக அவர்கள் பாரிய அழுத்தங்களை அரசாங்கத்தின் மீது பிரயோகித்து சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

மேலும் உள்ளூர் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் போன்று குறைகள் நிறைந்த காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தினை ஏற்றுக்கொள்ளுமாறு எம்மீது அழுத்தம் வழங்குவதணை நிறுத்தி எமக்கான நீதி விரைவில் கிடைக்கப்பெறுவதற்கு அரசாங்கத்திற்கு அழுத்தமும் ஆலோசனையும் வழங்கவேண்டும்.

இவற்றில் ஏற்படும் தாமதங்களால், நாம் நேரடியாக சர்வதேச விசாரணையினைக்கோருக்கின்றோம் ஆயினும் சர்வதேச நிறுவனங்கள் மீதான நம்பிக்கைகளை குறைக்கும் வகையில் அவர்களாலும் காலதாமதம் செய்யப்படுவதோடு நீதி வழங்களில் அவர்களின் பங்களிப்பு மற்றும் இலங்கை சிங்கள அரசாங்கம் மீதான அழுத்தம் போதாதுள்ளதாக கருதுகின்றோம். ஆயினும் மக்கள் மயப்படுத்தப்படலூடாக எமது போராட்டம் வலுப்பெறுவதற்கும் அதனூடாக உறவுகளை மீட்கவும் விரைவாக நீதியை பெறவும் முடியுமென கருதுகின்றோம்.

நீதி வழங்களில் ஏற்படும் தாமதங்கள் மேலும் உறவுகளை தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும். அதன் விளைவுகளும் புறக்கணிப்பும் எமது இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கி பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலை உருவாகாதிருக்க சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினுடனான விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு எமக்கான நீதி வழக்கப்படவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். என வடக்கு கிழக்கு மாகாணத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.