வவுனியா சின்னத்தம்பனை கிராமத்தில் மாலை வேளைகளிலும் இரவு நேரங்களிலும் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் இக் கிராம விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
இரவு நேரங்களில் எமது வயலுக்குள் வருகின்ற காட்டு யானைகள் மூன்று ஏக்கர் அறுபடை செய்யக்கூடிய நெல்லை முற்றுமுழுதாக அழித்து விடுகின்றது.
எம் பயிர்ச்செய்கை கடந்த காலங்களிலே ஏற்பட்ட கடும் வரட்சியினால் முற்றுமுழுதாக அழிவடைந்தது. பின்னர் கடும் மழை வெள்ளத்தினால் எம் விவசாய நிலங்கள் முற்றாக அழிவடைந்து இவ்வாறு தொடர் அழிவு ஏற்பட்டமையால் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டோம்.
இந் நிலையில் நேற்று இரவு காட்டு யானைகளின் தாக்கத்தினால் சுமார் மூன்றரை இலட்சம் பெறுமதியான நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.
நாம் வங்கியில் கடன் எடுத்து விவசாயம் செய்தோம், மருந்து, உர மானியங்கள், உழவு இயந்திர செலவுகள் என எல்லாவற்றையும் கடனாகவே செய்தோம். அதனால் இந்த வெள்ளாண்மையை அறுபடை செய்தே விவசாயத்திற்காக பெற்ற கடனை மீண்டும் கொடுக்க வேண்டியுள்ளது.
ஆனால் காட்டு யானைகளின் தாக்கத்தினால் எம் பயிர்கள முற்றாக அழிவடைந்துவிட்டது. நாம் எவ்வாறு பெற்ற கடன்களை கொடுப்பது. இதற்கு சில தினங்களுக்கு முன்னர் காட்டு யானைகள் அருகில் பயன் தரும் தாவரங்களை அழித்துவிட்டது. அந்த அழிவிற்கே இதுவரை எமக்கு எவரும் ஒரு உதவிதிட்டங்களும் செய்யவில்லை.
இந்நிலையில் நாங்கள் இதற்கு பொறுப்பான அரசாங்க உயர் அதிகாரிகளிடம் கேட்கின்றோம் இனிவரும் காலங்களிலாவது எமது விவசாய நிலங்களையும், பயிர்களையும் பாதுகாப்பதற்க்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதோடு, எம் விவசாய காணிகளுக்கான யானை வேலியினை அமைத்தும், அழிவடைந்த பயிர்களுக்கான நஸ்ட ஈட்டினையும் உயர் அதிகாரிகளே பெற்றுத் தரவேண்டும் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.