களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்கு அஞ்சலி

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் வைத்து இந்திய படையினரால் 30 பொதுமக்கள்  டாங்கிகளால் நசுக்கியும்,துப்பாக்கியால் சுட்டும் படுகொலைசெய்யப்பட்டனர்.

கண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் சிறுவர்கள்,பெரியவர்கள்,பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர்.இவர்களை நினைவுகூரும் வகையில் களுவாஞ்சிகுடியில் நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுமக்கள்,உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்.