கட்டுநாயக்கா விமான நிலையத்தில் சிறப்பு விமானம்

உயர் தொழினுட்பத்துடன் கூடிய ZS-ASN ரகத்திலான The Basler BT-67 என்ற விமானமே தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உயரத்தில் இருந்து நிலத்தை துல்லியமாகவும் மேலோட்டமாகவும் படம் பிடிக்கக்கூடியது.

3 நாட்கள் திட்டத்துக்காக குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள குறித்த விமானம் எதிர்வரும் 09 ஆம் திகதி இந்தியா நோக்கி பறக்கவுள்ளது.

இந்தியாவுக்கு செல்லவுள்ள குறித்த விமானத்தின் பயணப்பாதை இலங்கை வழியாக திட்டமிடப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.இலங்கையில் தரையிறங்கும் நோக்கிலேயே பயணப்பாதை திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்திடம் நியூஸ்பெர்ஸ்ட் இது தொடர்பில் வினவியது.விமானத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லையெனவும், நாட்டில் எவ்வித கண்காணிப்பு நடவடிக்கைக்கும் அனுமதி வழங்கப்படவில்லையெனவும் பணியம் குறிப்பிட்டது.