கடலில் மூழ்கி உயிரிழந்த குடியேறிகளுக்காக ஈபிள் கோபுரத்தின் கீழ் ஓவியம்

பிரான்ஸில் இருக்கும் ஈபிள் கோபுரத்தின் கீழ் இருக்கும் பூங்காவில் கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டிருப்பது போன்ற மிகப் பெரிய ஓவியம் ஒன்று இன்று சனிக்கிழமை (15) திறந்து வைக்கப்பட்டது.

சுற்றுச் சூழலுக்கு ஆபத்து விளைவிக்காத  இந்த பூச்சு  600 மீற்றர் தூரத்திற்கு வரையப்பட்டுள்ளது. இது ஈபிள் கோபுரத்தில் இருந்து பார்த்தால் முழுவதுமாகத் தெரியும்.

இது பிரான்சை சேர்ந்த சேய்பேவால் என்ற ஓவியரால் உருவாக்கப்பட்டது. இவர் இயற்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் பெரிய ஓவியங்களை வரைவதில் வல்லவர்.

அவரின் ஓவியங்கள் பல மலைப் பகுதிகளிலும், உலகில் உள்ள சில பூங்காக்களிலும் உள்ளன. அவை சில நாட்களுக்கே காட்சியளிக்கும். பின்னர் அழிந்து விடும்.

பியாண்ட் வால்ஸ் என்று அழைக்கப்படும் அவரின் இந்த சமீபத்திய ஓவியம், மத்திய தரைக்கடலில் மூழ்கும் ஆபத்தில் இருக்கும் குடியேறிகளை மீட்கும் பணியில் ஈடுபடும் தொண்டு நிறுவனத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக வரையப்பட்டுள்ளது.

கடந்த வருடம் ஒரு நாளில் மத்திய தரைக் கடலை கடக்க முயன்ற குடியேறிகளில் சராசரியாக ஆறு பேர் உயிரிழந்தனர் என ஐ.நா. தெரிவித்திருந்தது.

இந்த ஓவியம் பாரிஸ் மேயரால் சனிக்கிழமையன்று (இன்று) திறந்து வைக்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து 20 நாடுகளில் சேய்பே தனது ஓவியங்களை பார்வைக்கு வைக்கவுள்ளார்.

லண்டன், பெர்லின், நைரேபி, ஆர்ஜன்டீனா போன்ற நாடுகளில் இதே மாதிரி கைகள் ஒன்றோடு ஒன்று பற்றிக் கொண்டிருப்பது போன்ற ஒவியத்தை சேய்பே வரையவுள்ளார்.