ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையுமே ஏமாற்றிய தமிழ் கட்சிகள் – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழர் தரப்பின் நிலைப்பாடாக தயாரிக்கப்பட்ட பொது ஆவணத்தின் 13கோரிக்கைகளையும் பிரதான வேட்பாளர்களிடம் கொண்டு சேர்க்காமல் மாணவர்களையும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் ஐந்து தமிழ் கட்சிகளும்  ஏமாற்றியுள்ளதாக யாழ் பல்கலைகழக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் மூலம் தாம் தயாரித்த பொது ஆவணக் கோரிக்கைகளை தாமே உதாசீனம் செய்து, கூட்டு முயற்சியையும் இக் கட்சிகள் குழப்பியுள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் தெரிவித்தது.

தமிழர் தரப்பின் ஒற்றுமைக்காக மாணவர்களாகிய நாங்கள் எடுத்த இந்த முயற்சியைத் தமது அரசியலுக்காக முந்திக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டும் தமது நிலைப்பாடுகளை அறிவித்தும் எல்லாவற்றையும் குழப்பியடித்து அனைவரையும் ஏமாற்றி முட்டாள்களாக்கி உள்ளதாக தெரிவித்திருக்கும் மாணவர்கள், இவர்களுக்கு மக்கள் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அறையில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பின் போதே மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் கூறுகையில்,

இதன் மூலம் ஐந்து கட்சிகளின் பொது இணக்கப்பாட்டுடன் 13 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது கோரிக்கைகளில் ஒன்றுபட்ட ஐந்து கட்சிகளும், அணுகுமுறை என்ற விடயத்தில் தவறியிருக்கிறது என்றனர்.