ஐ.நா சிறுவர் நிதியம் உருவாக்கும் சிறுவர் சினேக மாநகர்

தெற்காசியாவில் முதன்முறையாக இலங்கையில் சிறுவர் சினேக மாநகரை உருவாக்கும் செயற்றிட்டத்தினை மட்டக்களப்பு மாநகரசபையில் ஐ.நா சிறுவர் நிதியம் (யுனிசேப்) ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு மாநகரசபையில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் மணிவண்ணன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன்,சிரேஸ்ட திட்ட வரைஞர் லூயிஸ் மொரீரா டானியல்,மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,செரி நிறுவனத்தின் தேசிய திட்ட பணிப்பாளர் வி.தர்சன,மாநகர அணையாளர் சித்திரவேல்; உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபையினை சிறுவர் சினேகமிக்க மாநகரசபையாக மாற்றுவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

உலகில் தென்கொரியால் உள்ள ஒரு உள்ளுராட்சிமன்றத்தில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வெற்றிபெற்ற நிலையில் இலங்கையில் மட்டக்களப்பு மாநகரசபை தெரிவுசெய்யப்பட்டு முன்னெடுக்கப்படவுள்ளது.

Unicef 1 ஐ.நா சிறுவர் நிதியம் உருவாக்கும் சிறுவர் சினேக மாநகர்சிறுவர்களின் பாதுகாப்பு,கல்வி,அவர்களின் தேவைப்பாடுகள் மற்றும் அவர்கள் அன்றாடம் விரும்பி மேற்கொள்ளும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையிலான செயற்றிட்டங்கள் இதன்மூலம் முன்னெடுக்கப்படவுள்ளன.

யுத்தம்,சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் என பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள காரணத்தினால் இந்த மாவட்டத்தினை தெரிவுசெய்ததாக இங்கு கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் (யுனிசேப்) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி தீம் சட்டன் தெரிவித்தார்.

தெற்காசியாவிலும் இலங்கையிலும் முதல் சிறுவர் சினேக மாநகராக மட்டக்களப்பு மாநகரசபையினை மாற்றுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.