எதிக்கட்சியும் இனவாத அடிப்படையில் செயற்படுகின்றது; மங்கள சமரவீர குற்றஞ்சாட்டுகிறார்

“அரசாங்கத்தினால் பின்பற்றப்படும் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் என்பன நாட்டிற்கு ஒருபோதும் அவசியமானவை அல்ல. அவ்வாறிருக்க முன்னர் எதிர்க்கட்சியிலிருந்த பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுவது கவலையளிக்கிறது” என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர விசனம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கடந்த புதன்கிழமை அணிந்து வந்த ஆடை பாராளுமன்றத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தது. அதாவுல்லா ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு செல்வதைப்போன்ற ஆடையில் இலங்கையின் பாராளுமன்றத்திற்கு வருகைதந்திருக்கிறார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டியமை பற்றிய செய்திகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டன.

அதனை மேற்கோள்காட்டி மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கின்றார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“முன்னர் எதிர்க்கட்சியில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை போன்று தற்போதைய எதிர்க்கட்சியும் செயற்படுவது வருத்தமளிக்கிறது. இலங்கைக்கு ஒரு மாற்றுப்பார்வையே அவசியமானதாக இருக்கின்றதே தவிர, தற்போதைய அரசாங்கத்தின் இனவாதம் மற்றும் பெரும்பான்மைவாதக் கொள்கைகள் அல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார்.