“எங்கள் காட்டை காக்க மரணம் வரை போராடுவோம்”-அமேசான் பழங்குடி பெண்கள்

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடந்த ஆண்டு மிக மோசமாக அமேசான் காடுகள் அழிக்கப்பட்டது. காட்டுத்தீ, வேளாண்மைக்கான காட்டு அழிப்பு, மரங்களுக்காகக் காடுகளை அழிப்பது என பல்வேறு காரணிகள் அமேசான் காடுகள் சுருங்குவதற்குக் காரணம்.

ஒரு பக்கம் பிரேசில் அரசின் கொள்கை முடிவுகளே அமேசான் காடுகள் அழிவதற்குக் காரணமாக இருக்கிறதென்றால், மற்றொரு பக்கம் காடுகளை காக்க முதல் வரிசையில் நிற்கிறார்கள் அமேசான் பழங்குடிகள். அதுவும் குறிப்பாக பெண்கள்.

மரிஸ்டெலா எனும் 14 வயது அரரோ கரோ இனக்குழுவைச் சேர்ந்த பெண், “இந்த காடுதான் எங்கள் தாய். அந்த தாய் எங்களைக் கவனித்துக் கொண்டாள். பசித்த போது உணவிட்டால். இப்போது அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.” என்கிறார்.

சயிரூ பொல்சினாரூ தலைமையிலான பிரேசில் அரசு பழங்குடி மக்களுக்கான நில உரிமைச் சட்டத்தை ரத்து செய்வதில் முனைப்பாக இருக்கிறது.

மரிஸ்டெலா, “பொல்சினாரூ அரசு பழங்குடிகளை வெறுக்கிறது. ஆனால், நான் இந்த நிலத்தின் ஆதிக்குடி என்பதில் பெருமையாக உணர்கிறேன். அதுவும் ஒரு பெண்ணாக இந்த நிலத்தை காப்பது எங்கள் கடமை என நான் நம்புகிறேன்,” என்கிறார்.

ஒருபக்கம் அரசு அமேசான் காடுகளை கைப்பற்ற முனைய, இன்னொருபக்கம் பிரேசிலில் அமேசான் காடுகளைக் காக்கும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.