ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் வெகு விரைவில் சட்டத்தின் முன்; அஜித் ரோஹண

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் 80 சதவீதம் பூர்த்தியடைந்துள்ளன எனச் சட்டம் மற்றும் ஒழுக்காற்று பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“குண்டுத்தாக்குதலின் முக்கிய சூத்திரதாரிகள் வெகுவிரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். அத்துடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் ஈர்க்கப்பட்டுள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை நல்வழிப்படுத்த இந்தியாவில் சிறப்புப் பயிற்சிப் பெற்ற குழுவினரால் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

இலங்கையில் இஸ்லாமிய மற்றும் ஏனைய மத அடிப்படைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள், தாக்குதல்கள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது” என்றார்.