ஈழத் தமிழர்களின் சமாதானம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் – மோடி

இலங்கையில் தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கௌரவம் தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுகின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸவை டெல்லி ஐதரபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்பிற்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார்கள்.

இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வருகின்றது. இன்றைய சந்திப்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
இலங்கை பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தியா 2,870 கோடி கடன் அளித்துள்ளது. இலங்கையில் வீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 50,000 வீடுகள் கட்டித் தந்துள்ளோம். மேலும் 14,000 வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.

இலங்கையில் சூரிய ஒளி மின்திட்டத்தை செயற்படுத்த 720 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு வலிமையான அரசு அமைவது என்பது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கும் நன்மை தரும்.

இலங்கையில் வாழும் தமிழர்களின் சமத்துவம், நீதி, கௌரவம் தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுகின்ற நல்லெண்ண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை இருக்கின்றது. 13ஆவது அரசியல் சாசன திருத்தமும் இதில் அடங்கும். என பிரதமர் மோடி தெரிவித்தார்.