இல்லாத முகாமை அழித்ததாகக் கூறும் இந்தியா- மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர்

பாகிஸ்தான்  காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் அழித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அங்கு எந்தவிதமான தீவிரவாத முகாமும் இல்லை இந்திய இராணுவம் கூறுவது பொய்யானது என்று பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்தர் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் இந்திய இராணுவ வீரர்கள் உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் காயமடைந்தனர். இதையடுத்து, பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பதிலடி தரும் வகையில் இந்திய இராணுவமும் தாக்குதல் நடத்தியது.

இதில் பாகிஸ்தான் இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியதையடுத்து, இந்திய இராணுவமும் பீரங்கி மூலமும், சிறிய ரக ராக்கெட் லாஞ்சர்கள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இதில் பாகிஸ்தான்  பகுதியிலிருந்த 3 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் இராணுவத்தினர் 10 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், பல தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத் நேற்று தெரிவித்தார்

இந் நிலையில் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் இராணுவம்  மறுப்பு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் இது தொடர்பில் கூறுகையில்,

இந்திய இராணுவத் தளபதி ராவத்தின் கூற்று வேதனையளிக்கிறது. மிகவும் பொறுப்புள்ள பதவியில் ராவத் இருக்கிறார். பாகிஸ்தான்  காஷ்மீர் பகுதியில் 3 தீவிரவாத முகாம்களை இந்திய இராணுவம் அழித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அங்கு எந்தவிதமான தீவிரவாத முகாமும் இல்லை.

பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஊடகத்தை அழைத்து வரட்டும்,  காஷ்மீரில் தீவிரவாத முகாம்கள் ஏதும் இல்லை என்பதை நிரூபிக்கிறோம்.

புல்வாமா தாக்குதலுக்குப் பின் இந்திய இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி, இந்தப் பகுதியில் அமைதியைக் குலைத்துவிட்டார்கள்.

உள்நாட்டில் சில நலன்களுக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் இதுபோன்ற பொய்யான தகவல்களை இந்திய இராணுவம் கூறுகிறது. இது இராணுவத்தின் தொழில்முறைக்கே எதிரானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.