இலங்கையிலிருந்த 705பேர் கப்பல் மூலம் இந்தியா வருகின்றனர்

இலங்கையில் சிக்கியிருந்த 705 இந்தியர்கள் இன்று தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பல் மூலம் வரவுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வணிகம், கல்விக்காக இலங்கைக்கு சென்றவர்கள் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டதால், இந்தியா திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டனர். இவர்களை இந்திய மத்திய அரசின் ஏற்பாட்டில் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா மூலம் இந்தியாவிற்கு அழைத்து வர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கமைவாக அவர்கள் இன்று இந்தியா திரும்புகின்றனர்.

கடல் எல்லையை தாண்டி மீன் பிடித்ததற்காக கைதாகிய புதுக்கோட்டை மீனவர்கள் 11பேர், போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்ட 13பேர் உட்பட 419 தமிழர்கள் அடங்கலாக 705பேர் நாடு திரும்பவுள்ளனர்.

இவர்களில் 120 பேர் பெண்களாவர். இவர்கள் ஆந்திரா, கேரளா, குஜராத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இன்று மாலை 6.00 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட கப்பல் நாளை (02) தூத்துக்குடி துறைமுகம் வருகிறது.

துறைமுகத்திற்கு வருகை தரும் அவர்கள் சிறப்பு ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.