‘இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம்’;கார்டியனுக்கு சிறிலங்கா கடும் கண்டனம்

கார்டியன் பத்திரிகையில் வெளியான போக்குவரத்து புதிர் ஒன்றில் இலங்கையின் பூர்வீக பெயர் ஈழம் என தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு பிரித்தானியாவிற்கான இலங்கை தூதரகம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.

கார்டியனிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் இலங்கை தூதரகம் இதனை சுட்டிக்காட்டியுள்ளதுடன் இதனை அகற்றவேண்டும் மன்னிப்பு கோரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரிட்டனிற்கான இலங்கை தூதரகம் மேலும் தெரிவித்துள்ளதாவது

பிரபலமான எந்த சுற்றுலாப்பயண தீவின் பூர்வீக பெயர் ஈழம்? என்ற இந்த இரண்டவாது புதிர் கேள்விக்கு இலங்கை சரியான விடை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட தீவின் சமீபத்தைய கிளர்ச்சி அமைப்பின் பெயர் தமிழீழ விடுதலைப்புலிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் என்பது பயங்கரவாதத்தில் ஈடுபட்ட ,சிறுவர்களை பலவந்தமாக சேர்த்து போரில் ஈடுபடுத்திய, ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை கொலை செய்த அமைப்பு.

ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 32 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள அமைப்பு அது.

ஈழம் என்பது இலங்கையின் வடக்குகிழக்கில் தனிநாட்டை உருவாக்கும் இந்த அமைப்பின் கொள்கையை குறிப்பது, இது 1976 இல் அறிமுகப்படுத்தப்பட்டது,மேலும் ஈழம் என்பது இலங்கையின் சுதேசிய பெயராக ஒருபோதும் பயன்படுத்தப்பட்டதில்லை.

எழுத்தாளர் தடைசெய்யப்பட்ட அமைப்பையும் அவர்களின் கொள்கையையும் போக்குவரத்து தொடர்பான புதிரில் குறிப்பிட்டார் ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் கொள்கையை பரப்புவதற்கான தீய முயற்சி போல இது தோன்றுகின்றது,துல்லியமற்ற ஆராயப்படாத உள்ளடக்கங்களை வெளியிடுவதன் மூலம் இது உங்கள் பத்திரிகையின் ஆசிரிய பீட கொள்கைக்கு முரணாக உள்ளது.

குறிப்பிட்ட கட்டுரையிலிருந்து அந்த உள்ளடக்கத்தினை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது வரவேற்கப்படும், மேலும் இது தொடர்பில் மன்னிப்பு கோரவேண்டும் என இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.