இலங்கையர் நாடு திரும்ப வேண்டாம் என சிறீலங்கா அரசு கோரிக்கை

கொரோனா தொற்றை ஒழிக்கும் வரை தாம் தங்கியுள்ள இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு, தாய்நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களிடம் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சிறீலங்கா ஜனாதிபதி ஊடகப் பிரிவினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க இன்று(27) வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரஸை நாட்டிலிருந்து ஒழிக்கும் வரை தாம் வாழும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு தாய்நாட்டிற்கு வருகை தருவதற்காக எதிர்பார்த்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடம் அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டினுள் வைரஸ் வருவது மற்றும் பரவுவதை தவிர்க்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இரந்து வருகை தருவதை முழுமையாக நிறுத்தியுள்ளது. ஏனைய நாடுகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு நாட்டினுள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் உள்ள மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் நாட்டிற்கு வருகை தருவதற்காக முன்வைக்கும் கோரிக்கைகளை நாட்டில் கொரோனா வைரஸ் ஒழிக்கப்பட்டு நிலைமைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னர் கவனத்திற் கொள்வதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது தாங்கள் இருக்கின்ற இடங்களில் விமான நிலையங்களுக்கு அல்லது வேறு இடங்களுக்கு பயணம் செய்வது அவர்களுக்கும் இந்த நோய் தொற்றக்கூடிய இடர் நிலைமை உள்ளது.

எனவே தம்மைப் பற்றிய தகவல்களை குறித்த நாட்டின் இலங்கை தூதுவராலயத்திற்கோ அல்லது கொன்சியுலர் ஜெனரல் அலுவலகத்திற்கோ தெரியப்படுத்தி பாதுகாப்பாக இருக்குமாறு தாய் நாட்டிற்கு வருகை தர எதிர்பார்த்துள்ள அனைத்து இலங்கையர்களிடமும் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.