இந்திய நிதியுதவியுடனான திட்டங்களுக்கு மத்திய மாகாணத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது

மத்திய மாகாணத்தில், இந்திய அரசின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படவுள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப் தெரிவித்துள்ளார். இவரின் பொறுப்பிலேயே இந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அண்டை நாடு என்ற முறையில் இந்திய அரசு பல்வேறு உதவிகளை இலங்கைக்கு செய்து வருகின்றது. அதன்படி ஹட்டன் பகுதியில் ஒய்யா தோட்டப் பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமானத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மற்றும் ரமேஸ் பத்திரண ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக 14ஆயிரம் வீடுகள் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, இந்த வீடுகள் கட்டப்படவுள்ளன. இதேநேரம் தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்திற்கும் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த பயிற்சி மையம், இந்திய அரசு நிதியுதவியாக வழங்கிய 199 மில்லியன் இலங்கை ரூபாய் மதிப்பில் கட்டப்படவுள்ளது. அத்துடன் இந்த பயிற்சி மையத்திற்கு தேவைப்படும் இயந்திரங்கள், புதிய படிப்புகளுக்கான இயந்திரங்கள், தளபாடங்கள், வாகனங்கள் ஆகியவையும் இந்திய அரசின் நிதியுதவியில் நிறைவேற்றப்படவுள்ளன.

இந்தப் பயிற்சி மையத்தின் மூலம் எண்ணற்ற இலங்கை இளைஞர்கள் தொழில் பெற்று தங்களுக்கு ஏற்ற ஒரு துறையில் நுழைந்து தங்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற உதவும்.

இந்தியா 560 மில்லியன் அமெரிக்க டொல்கள் வரையான நிதியை உதவியாக வழங்க முன்வந்துள்ளது. இதன்படி இலங்கை இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு, தொழிற் திறன், பயிற்சி அளிக்கும் வகையில் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.