இந்தியாவிலிருந்து வெளியேறவுள்ள ஈழத் தமிழர்கள் கண்காணிப்பில் படையினர்

இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகள், கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு தப்பிச் செல்லவிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து, கடலோரப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா திருச்சி, சென்னை, உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வரும் பிரெஞ்சு மொழி பேசும் ஈழத் தமிழ் அகதிகளே புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் ஊடாக வெளியேறுவதற்காக புதுச்சேரிப் பகுதியில் தங்கியிருப்பதாக தமிழக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, நேற்று, தமிழக கடலோரக் காவல் படையினர், புதுச்சேரி கடலோரக் காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இத்தகவலையடுத்து, புதுச்சேரியில் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக் குப்பம் வரையான கடலோரக் காவல் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டதுடன், தேங்காய் திட்டு துறைமுகத்தில் இருந்து ரோந்துப் படகில் சென்று கடலில் முகாமிட்டு படகுகளை கண்காணித்தனர். மேலும் ரயில் நிலையம், பஸ் நிலையங்களிலும் பொலிசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியை அடுத்து கீழ்ப்புத்துப்பட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கடந்த இரு நாட்களில் தங்கியுள்ளவர்களின் விபரம், வெளி நபர்கள் தங்கியுள்ளனரா என கியூ பிரிவு பொலிசார் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தச் சம்பவத்தையடுத்து, புதுச்சேரி கடல் எல்லை முழுவதும் கண்காணிப்பில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.