ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் இந்தியாவே உள்ளது,இந்த ஆவணத்தில் கையெழுத்து வைத்த ஐந்து கட்சிகளும் இந்தியாவின் முகவர்கள்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தியா விரும்பாத எதையும் செய்யாதவர்கள் இப்பொழுது திடீரென இந்தியா கொடுத்த ஆலோசனையின்படிதான் அதில் கையொப்பமிட்டுள்ளனர். வரப்போகும் ஜனாதிபதி தேர்தல் வெறுமனே சஜித்,- கோத்தபாயவிற்கிடையிலான தேர்தல் அல்ல. இந்த நாட்டிலே நடக்கும் ஜனாதிபதி தேர்தல் என்பது கட்சிகளின் போட்டியல்ல, அதன் பின்னால் நடக்கும் வல்லரசுக்களுக்கிடையிலான போட்டியாகும்.
ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கையொப்பமிட்டதன் பின்னணியில் எதனைச் செய்வது என்றாலும் இந்தியாவின் அனுமதியை பெறாமல் இவர்கள் செயற்பட மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள்இந்தியா தடைசெய்திருந்த கோட்பாடுகளை எப்படி ஒன்றிணைந்து கையொப்பமிட்டார்கள் என்பதுதான் கேள்வி.
தேர்தலுக்காக அந்த அறிக்கையில் கையொப்பமிட்டார்கள் என்பது ஒருபக்கமிருக்க தேர்தலுக்காக மட்டுமே தாங்களும் கொள்கைவாதிகள் என காட்டிக் கொள்வதற்காக மட்டும் அதில் கையொப்பமிட்டிருக்க மாட்டார்கள். இந்த செயலின் ஆழத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
தேசம் என்ற கோட்பாட்டை நக்கல் அடித்து நையாண்டி செய்தவர்கள், தமிழர்களின் இறைமை என்பதை நிராகரித்தார்கள். இனப்படுகொலை தீர்மானத்தை நிராகரித்தார்கள்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு சென்றால்தான் தமிழ் மக்களிற்கு நீதி கிடைக்கும் என்ற கோட்பாட்டை நிராகரித்து நையாண்டி செய்தார்கள். கூட்டமைப்பு மட்டுமல்ல கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தங்களை கொள்கைவாதிகளாக காண்பித்த விக்னேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியினர் போன்றவர்களும் தேசம், இறைமையை நிராகரித்தார்கள்.
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுதிட்டம் வரும் நிலையில் விக்னேஸ்வரன் இவற்றை கைவிட்டு மாகாணசபையில் ஒரு தீர்வு யோசனைகளை தயாரித்து அரசாங்கத்தின் அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பித்தார். அவ்வாறான நிலையில் இதுவரை தமிழர்களின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்து வந்த தரப்புக்கள் திடீரென எழுந்து எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாதென 2009இலிருந்து நாங்கள் சொல்லி வந்த கோட்பாடுகளை கொள்கையளவில் ஏற்றுஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். எப்படி இந்த விசித்திரமான செயல் நடந்திருக்க கூடும்?
கோத்தபாய பின்னாலுள்ளது சீனாவும் அதன் சார்பு நாடுகளும் சஜித்தின் பின்னாலுள்ளது இந்தியாவும் மேற்கு நாடுகளும். இந்த ஆவணத்தில் கையெழுத்து வைத்த ஐந்து கட்சிகளும் இந்தியாவின் முகவர்கள்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த அறிக்கையின் மூலம், சீனா சார்பு கோத்தபாய விற்கு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர்.
நீங்கள் இந்தியா மேற்கு நாடுகளின் நலன்களை மீறி செயற்பட்டால் இதுவரை தமிழ் தேசிய அரசியலை தமிழ் மக்களிடமிருந்து இல்லாமல் செய்ய கூட்டமைப்பின் ஊடாக செயற்பட்ட நாங்கள் மீண்டும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்துவது மட்டுமல்ல அதை ஆதரிக்கவும் தயாராக இருக்கிறோம் என்பதை அந்த ஐந்து முகவர் அமைப்பின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.
அதேநேரம் இன்னொரு செய்தியை கோத்தபாயவிற்கும் அவர் சார்ந்தவர்களிற்கும் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டு கூட்டில் ஒற்றையாட்சிக்குரிய இடைக்கால அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென நாம் வாதாடினோம். அந்த கோட்பாடுகளை உண்மையில் ஏற்றுக்கொள்வதென்றால் இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதில் எந்த சங்கடமும் இருக்க முடியாது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த 4 வருடமாக இடைக்கால அறிக்கையை தயாரித்து விட்டு இப்போது நிராகரிப்பது வெட்கம். அவர்களின் முகத்திலடித்ததை போலிருக்கும் என சிலர் சொல்கிறார்கள்.
இடைக்கால அறிக்கையை நிராகரிக்காமலிருப்பதன் மூலம் கோத்தபாயவிற்கு இரண்டாவது செய்தியை கொடுத்துள்ளனர். சீனாவை கைவிட்டு இந்திய மேற்குலக வட்டத்திற்குள் நீங்கள் இருப்பீர்கள் என்றால் தமிழ் அரசியலை நாம் ஒற்றையாட்சிக்குள் முடக்கவும் தயாராக இருக்கிறோம் என்ற செய்தியை கோத்தபாயவிற்கு அனுப்பியுள்ளனர்
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மீண்டும் மீண்டும் எங்கள் மக்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்ற தரப்புக்களில் குறிப்பாக வெல்லக் கூடிய தரப்புக்களான சஜித் பிரேமதாசா அல்லது கோத்தபாய ராஜபக்ச தான். இதில் கோத்தபாய ராஜபக்ச என்பவர் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் கொடுரமான நபர் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதில் எந்த விதமான சந்தேகமும் இருக்க முடியாது. கோத்தபாய ராஜபக்ச விற்கு வாக்களிக் முடியாது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
அதே நேரம் சஜித் பிரேமதாசாவுடைய தரப்பும் அதே அளவிற்கு மோசமான செயற்பாட்டில் இறங்குவார்கள் என்பதையும் எங்கள் மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்தப் போரை நடாத்தி இனப்படுகொலை செய்தது கோத்தபாய ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் இணைந்து தான். வரப்போகின்ற சஜித் பிரேமதாசா ஆட்சியில் சரத் பொன்சேகா பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருப்பார் என்ற விடயத்தை மிகத் தெளிவாக பிரகடனப்படுத்தியிருக்கின்றார்கள்.
எனவே எந்தவொரு வேட்பாளரும் வெல்வதற்கு தமிழ் மக்களுடைய அல்லது முஸ்லீம் மக்களுடைய வாக்குகளைப் பெற்றுத் தான் வெல்லக் கூடியதான நிலைமை நிச்சயமாக இன்றைக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நிலைமையில் தமிழ் முஸ்லீம் மக்கள் விரும்பிய வகையில் அவர்களது கோட்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படுகிற கலாச்சாரத்தை நாங்கள் உருவாக்கியே ஆகவேண்டும்.ஆகவே எங்கள் மக்கள் இதை உணர்ந்து இந்தத் தேர்தலில் செயற்பட வேண்டுமென்பதே எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது