ஆறுமுகனின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கு கொரோனா?

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் ஒருவருக்கும் அவருடன் தொடர்பிலிருந்தவருக்கும் வாகனசாரதிக்கும் கொரோனா வைரசிற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொட்டகல பொதுசுகாதார பரிசோதகர் ஒருவரை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இவர்கள் மூவரும் நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பத்திரிகையாளர் பத்தரமுல்லையில் உள்ள ஆறுமுகன் தொண்டமானின் வீட்டிற்கு சென்றுள்ளார், பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமை அலுவலகத்திற்கும் சென்றுள்ளார் என பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பத்திரிகையாளர் கொரோனா வைரசிற்கான பல அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பத்திரிகையாளர் டிக்கோயா மருத்துவமனைக்கு சென்றுள்ளார் சுகாதார அதிகாரிகள் அவரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதுடன் மூவரையும் 14 நாட்களிற்கு வீடுகளில் தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது என சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.