ஆட்சியாளர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர்

ஆட்சியாளர்கள் அனைவரும் ஊடகவியலாளர்கள் மீது தொடர்ந்தும் வன்முறையை கட்டவிழ்த்திருந்தனர் என வடமாகாண ஊடக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இன்று வடமாகாணத்தில் உள்ள ஐந்து ஊடக அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியினரும் தமிழ் மக்களுக்கு எதிரான இனவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்து கட்டவிழ்த்து வந்துள்ளனர். அதிலும் 2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 19ஆம் திகதி மயில்வாகனம் நிமலராஜன் கொலையுடன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களது கொலை இன்று வரை தொடர்கின்றது.

தான் நேசித்த மக்களுக்காகவும், ஊடக சுதந்திரத்திற்கும் தனது இன்னுயிரை ஈர்ந்த நண்பன் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகளைக் கடக்கும் நிலையிலும், நீதி கிட்டாத நிலையில் காலம் கடந்து செல்கின்றது. தமிழ் ஊடகவியலாளர் படுகொலை நினைவு நாளாக ஒக்டோபர் 19ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டு, உலகில் வாழும் தமிழ் மக்களால் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

நிமலராஜனுடன் அரங்கேற்றப்பட்ட ஊடகப் படுகொலைகள் 43இற்கும் அதிகமான நண்பர்களை இழக்க வைத்து அநாதரவாக எம்மை விட்டிருக்கின்றது. அதிலும் 2005 முதல் 2010 வரையான ஆட்சிக் காலத்தில் கொலைகள், காணாமல் போதல் உச்சமடைந்திருந்தது. நூற்றுக் கணக்கான ஊடகவியலாளர்கள் ஊடகத் தொழிலிலிருந்தோ அல்லது நாடடிலிருந்தோ வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டன. ஊடகவியலாளர்கள் இன வேறுபாடின்றி உண்மைகளை நேசித்தமைக்காக தாக்கப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டிருந்தனர். மாறி மாறி ஆட்சியிலிருந்த எத்தரப்பும் ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள், ஊடகவியவியலாளர்களை காணாமல் ஆக்கியோர் எவரையும் விசாரணைக்கு உட்படுத்தவும் இல்லை. அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் போதும் அதுகூட இழுபறிப்பட்டே செல்கின்றது.

அதிலும் நல்லாட்சி என ஆட்சிக் கதிரையேறியவர் தனக்கு 800 கோடி வீட்டுடன் செல்கின்றார். அவரை ஆட்சிக் கதிரையில் ஏற்றப் பாடுபட்ட ஊடகங்களை அநாதரவாக கைவிட்டே செல்கின்றார். இன்னொரு புறம் விசாரணைகளை மேற்கொள்ள காவல்துறையினர் போதாதிருப்பதாக கூறப்படுகின்றது. தனது ஆட்சிக் காலத்திலும் குற்றவாளிகளை பாதுகாத்து வைத்திருந்ததன் மூலம் எமது நம்பிக்கையினை அவர்களும் சிதைத்துள்ளனர்.

நல்லாட்சிக் காலத்திலும் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் இல்லாது போயிருந்த போதும் ஊடக அடக்கு முறைகளும் நெருக்கடிகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்த ஆண்டில்கூட முல்லைத்தீவில் ஊடகவியலாளர் குமணன் காவல்துறையால் தாக்கப்பட்டிருந்தார். மற்றொரு ஊடகவியலாளரான ச.தவசீலன் கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அதேபோன்று வீரகேசரி பத்திரிகை செய்தியாளர் தி.சோபிதன் தற்போது விசாரணைக்கு கொழும்பு காவல்துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். மீண்டும் தேர்தல் காலம் தொடங்கியுள்ள நிலையில் தமது கறைபடிந்த கைகளை மறைத்தவாறு பல கொலையாளிகளும் முன்னே வரத்தொடங்கியுள்ளனர். நடந்தவை பற்றி அவர்களில் பலரும் மறதி கொண்டுள்ளனர்.

இந்நிலையில், நண்பர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட ஒக்டோபர் 19 முதல் நவம்பர் 19 வரையிலான ஒரு மாத காலத்தை ஊடகப் படுகொலைகள், காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களிற்கான நீதி கோரி பயணிக்கும் காலமாக வடக்கு ஊடக அமைப்புகளாகிய நாம் பிரகடனப்படுத்துகின்றோம்.

ஆட்சியாளர்களிடமும், சர்வதேசத்திடமும் நீதி கோரும் எமது பாதையினை மக்கள் மயப்படுத்த நாம் நேசிக்கும் மக்களிடமே செல்வோம்.  என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.