அழிக்கப்படும் தொல்லியல் சின்னங்கள்; புதையல் தோண்டியோர் நவீன கருவியுடன் கைது

மன்னார், பேசாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் புதையல் தோண்ட பயன்படுத்திய நவீன கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பேசாலை பதில் காவல்துறை பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்களும் பேசாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களும் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து நவீன கருவி ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 6 நபர்களும் பேசாலை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (14) மாலை மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது குறித்த 6 சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதையல் தோண்டுதல் என்றபெயரில் எமது தொல்லியல் அடையாளங்கள் சிதைக்கப்பட்டு வருவதையிட்டு மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம்.எமது வரலாற்றை எடுத்துக்காட்டும்,நிலைநிறுத்தும் இத்தகைய அடையாளங்களை அழிவிலிருந்து காப்பது எமது தார்மிக கடமையாகும்.