சிங்கப்பூரிலிருந்து அர்ஜூனா தப்பிச் சென்றாரா? வாசு வெளியிடும் தகவல்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து தப்பிச்சென்று விட்டார் என இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் –

“முன்னாள் மத்தியவங்கி ஆளுநரை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டுவர சட்டமா அதிபர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். எனினும் சிங்கப்பூரில் தங்கியிருந்த மகேந்திரன் அங்கிருந்து தப்பிச்சென்று மறை விடமொன்றுக்குச் சென்றுவிட்டார்.

ஆனால் அவரை நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலைமைகள் தொடர்பாக வெளியுறவு அமைச்சு கண்காணித்து வருகிறது. கே.பியை இலங்கைக்கு கொண்டு வந்தமையைப்போல் மகேந்திரனையும் அரசாங்கம் இலங்கைக்குக் கொண்டுவரும் எனவும் அவர் தெரிவித்தார்