அரசாங்கத்தில் அதிகரிக்கு ‘வியத்மக’வின் ஆதிக்கம்: 10 உறுப்பினர்கள் தெரிவு

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவான வியத்மக அமைப்பைச் சேர்ந்த 8 பேர் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் இவர்கள் போட்டியிட்டிருந்தனர். மேலும் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் இருவர் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் மாவட்ட ரீதியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வியத்மக அமைப்பின் உறுப்பினர்களில், கொழும்பு – சரத் வீரசேகர, கம்பஹா – கலாநிதி நாலக கொடஹேவா, மாத்தளை – நாலக கோட்டேகொட, அனுராதபுரம் – போராசிரியர் சன்ன ஜயசுமன, குருணாகல் – பேராசிரியர் குணபால ரத்னசேகர, கண்டி – சட்டத்தரணி உதயன கிரிந்திகொட, அம்பாந்தோட்டை – மருத்துவர் உபுல் கலப்பத்தி, திகாமடுல்ல – திலக் ராஜபக்ஷ ஆகியோர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

வியத்மக அமைப்பைச் சேர்ந்த அஜித் நிவாட் கப்ரால், சீதா அரம்பேபொல ஆகியோர் தேசிய பட்டியல் மூலமாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். வியத் மக அமைப்பு 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கோட்டாபய தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய தன்னை வியத்மக அமைப்பின் உறுப்பினர் என்றே கூறிக்கொண்டதுடன் அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதித் தேர்தல் வெற்றிக்கு பின்னர், பொதுத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் வியத்மக அமைப்பை சேர்ந்த தலாஇரண்டு பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என அந்த அமைப்பு கூறிவந்தது. எனினும் ஒன்பது பேருக்கு மாத்திரமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட வியத்மக அமைப்பை சேர்ந்த அனுர பெர்ணான்டோ தோல்வியடைந்தார்.