அம்பாந்தோட்டை உடன்பாட்டை மீளாய்வு செய்வதற்கு சீனா இணக்கம் – புதிய திட்டங்களையும் ஆரம்பிக்க முயற்சி

சிறீலங்காவின் புதிய அரச தலைவர் கோத்தபயா ராஜபக்சா கேட்டுக் கொண்டதற்கு இணங்க அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 99 வருடகால கடன் மீள் செலுத்தும் உடன்பாட்டை ஆய்வு செய்வதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சிறீலங்காவுக்கான முன்னாள் சீனா தூதுவர் வூ ஜியாங்கோ சிறீலங்கா அரச தலைவருடன் நேற்று (1) மேற்கொண்ட பேச்சுக்களைத் தொடர்ந்தே இந்த முடிவு எட்டப்பட்டது. சீனா அரச தலைவரின் பிரதிநிதியாகவே அவர் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார்.

எனினும் இரு தரப்பு உறவுகளும் பாதிக்காத படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்துள்ள சீனா அதிகாரி, சீனாவின் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்படாது கிடப்பில் உள்ளதாகவும் அவற்றை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதில் கொழும்பு – இரத்தினபுரி விரைவுப் பாதையும் அடங்கும்.

சீனாவின் இந்த நடவடிக்கை என்பது தென்னாசிய நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு வலையமைப்பை உருவாக்குகின்றது என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.