அமேசான் காடுகளை பாதுகாக்க போராடிய மற்றுமொருவர் படுகொலை

அமேசானிலுள்ள பாதுகாக்கப்பட்ட பழங்குடியினத்தை சேர்ந்த செயற்பாட்டாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக பிரேசில் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவாஜஜரா பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜெசிகோ குவாஜஜராவின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை அவரது கிராமத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதாக பிரேசிலுள்ள மரன்ஹாவ் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஆசிரியரான இவர், அமேசான் காடுகளில் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுவதை எதிர்த்து போராடும் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ எனும் குழுவின் ஆதரவாளரும் ஆவார்.

எண்ணற்ற வழிகளில் சுரண்டப்பட்டு வரும் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காக போராடி வருபவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம், கடந்த ஆறு மாதங்களில் அமேசான் காடுகளை பாதுகாப்பதற்காகவும், அங்கு வாழ்ந்து தொல்குடிகளின் நிலவுரிமைக்காக போராடியதற்காகவும் கொல்லப்பட்ட ஐந்தாவது நபர் ஜெசிகோ.

குவாஜஜராஸ் என்பது 20,000 மக்களைக் கொண்ட பிரேசிலின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றாகும். 2012ஆம் ஆண்டில், அரேரிபோயா பிராந்தியத்தை பாதுகாக்க அவர்கள் ‘கார்டியன்ஸ் ஆஃப் ஃபாரஸ்ட்’ எனும் அமைப்பை தொடங்கினர்.

ஜெசிகோவை கொன்றது யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.