அமெரிக்கா தலையிடத் தேவையில்லை; நாங்கள் பேசித் தீர்ப்போம் -சீனா

சிக்கிம், லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவத்துக்கும் இந்திய ராணுவத்துக்கும் சிலபல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது, இந்தியா அத்துமீறி தங்கள் பகுதியில் நுழைவதாக சீனா கூறிய குற்றச்சாட்டை இந்தியா கடுமையாக நிராகரித்தது.

இந்திய எல்லைக்குள் சீனா நுழைவதாக இதற்கு முன்பாக இந்தியத் தரப்பினர் குற்றம்சாட்டியதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க இருநாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சு நடத்தியதில் பதற்றம் குறைந்தது.

இந்நிலையில் அமெரிக்க அதிகாரி ஒருவர் இது தொடர்பாகக் கூறும்போது, “எல்லையில் உள்ள சுமுகமாக நிலையை சீனா பதற்றமான சூழலாக மாற்றுகிறது. அண்டை நாடுகளிடம் அத்துமீறுவதே சீனாவின் செயல்பாடாக உள்ளது” என்றார்.

இதனையடுத்து கொந்தளித்துப் போன சீன வெளியுறவு அமைச்சக அதிகாரி ஸாவோ லிஜான் கூறும்போது, “இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினையில் அமெரிக்கா கருத்து தெரிவிப்பது முட்டாள்தனமான செயல். நாங்கள் சுமுகமாகப் பேசித்தீர்ப்போம். இதில் அமெரிக்கா தலையிட வேண்டிய அவசியமிலை.

தூதரக ரீதியில் என்னென்ன நடவடிக்கைகள் தேவையோ அதை இருநாடுகளும் செய்து வருகின்றன. இதில் எங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படும்படி இந்தியாவை வலியுறுத்தியுள்ளோம்.

எல்லைப்பகுதியில் சீன வீரர்கள் எப்போதும் அமைதியான நிலைமையையே கடைப்பிடிக்கின்றனர், எனவே இதில் அமெரிக்காவுக்கு எந்த வேலையும் இல்லை” என்று சாடினார்