அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெயை சேமிக்கின்றது?

அமெரிக்காவின் லூசியானா மற்றும் டெக்ஸாஸ் மாகாணங்களில் பாதாள சுரங்கங்களில் பெருமளவு கச்சா எண்ணெய் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவில் முக்கிய கச்சா எண்ணெய் வளாகத்தின் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பெருமளவு இருப்பில் இருந்து கச்சா எண்ணெயை வெளியில் எடுப்பது பற்றி அமெரிக்க அதிகாரிகள் பேசி வருகின்றனர்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போது, “சந்தையில் போதிய அளவிற்கு எண்ணெய் கிடைக்கச் செய்வதற்கு”  இந்த கச்சா எண்ணெயைப் பயன்படுத்தலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

டெக்ஸாஸ் மற்றும் லூசியானாவில் பாதாள குகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 640 மில்லியனுக்கும் அதிகமான பரல்கள் அளவிலான கச்சா எண்ணெய் பற்றித்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான கையிருப்பை வைத்துக் கொள்ளும் வழக்கம் 1970களில் இருந்தே அமுல்ப்படுத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச எரிசக்தி முகாமையின் உறுப்பு நாடுகள் அனைத்துமே 90 நாட்களின் தேவைக்கு இணையான அளவிற்கு கையிருப்பு வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அமெரிக்காவின் கையிருப்புதான் உலகில் அதிகபட்ச அளவாக உள்ளது.

us oil 2 அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெயை சேமிக்கின்றது?1970களின் தொடக்கத்தில் மத்திய கிழக்கு நாடுகள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்ய மறுத்த போது உலகம் முழுக்க கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து, கையிருப்பு வைத்துக் கொள்வது பற்றிய சிந்தனை அமெரிக்க அரசியல்வாதிகள் மத்தியில் உருவானது.

1973இல் அரபு இஸ்ரேல் போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்ததால், ஈராக், குவைத், கட்டார் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய மறுத்தன.

அந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் மூன்று வாரங்கள் மட்டுமே அந்தப் போர் நீடித்தது. ஆனால் கச்சா எண்ணெய் வழங்குவதற்கான தடை மார்ச் 1974 வரையில்  நீடித்தது. அதனால் உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை 3 டொலர் என்ற அளவில் இருந்து 12 டொலர் என நான்கு மடங்கு அதிகரித்தது.

பாதிக்கப்பட்ட நாடுகளில் பெட்ரோல் நிலையங்களுக்கு எதிரே காத்திருக்கும் கார்களின் புகைப்படங்கள், நெருக்கடியை வெளிக்காட்டுவதாக இருந்தன.

us oil 3 அமெரிக்கா ஏன் பாதாளத்தில் கச்சா எண்ணெயை சேமிக்கின்றது?அமெரிக்க நாடாளுமன்றம் 1975இல் எரிசக்திக் கொள்கை மற்றும் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கியது. இன்னொரு முறை பெரியளவில் கச்சா எண்ணெய் கிடைப்பது பாதிக்கப்பட்டால், நிலைமையைக் கையாள்வதற்காக முக்கிய பெற்றோலிய கையிருப்பு வசதியை உருவாக்கியது.

இப்போது நான்கு இடங்களில் கச்சா எண்ணெய் சேமிக்கப்படுகின்றது. டெக்ஸாஸில் ப்ரீபோர்ட் மற்றும் வின்னி, லூசியானாவில் சார்ள்ஸ் ஏரிக்கு வெளியிலும், பேட்டன் ரூஜ்ஜிலும் சேமிக்கப்படுகின்றது.

ஒவ்வொரு இடத்திலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட, உள்புறமாக இரசாயன உப்பு பூசப்பட்ட பாதாள குகைகள் ஒரு கிலோமீற்றர் வரை (3,300 அடி) உள்ளன. அவற்றில் கச்சா எண்ணெய் சேமிக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேலே கொள்கலன்களில் வைப்பதை விட இதற்கான செலவு குறைவு. பாதுகாப்பானதும்கூட. உப்பின் இரசாயனக் கலப்புத் தன்மையும், புவியியல் அழுத்தமும் கச்சா எண்ணெய் கசியாமல் தடுக்கின்றன.

ப்ரீ போர்ட் அருகே பிரியன் மவுண்ட் என்ற இடத்தில் உள்ள மிகப் பெரிய சேமிப்பு வளாகத்தில் 254 மில்லியன் பரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் சேமிக்கும் வசதி உள்ளது.

செப்டெம்பர் 13ஆம் திகதி 644.8 மில்லியன் பரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் இந்த பாதாள குகைகளில் கையிருப்பு இருந்தது என்று இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகத்துறையின் தகவலின்படி, 2018இல் அமெரிக்கர்கள் சராசரியாக ஒரு நாளுக்கு 20.5 மில்லியன் பரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெயை பயன்படுத்தியுள்ளனர். அதாவது கையிருப்பை  வைத்து நாட்டில் 31நாட்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஜெரால்ட் போர்ட் கையெழுத்திட்ட 1975ஆம் ஆண்டு சட்டத்தின்படி, “எரிபொருள் விநியோகத்தில் கடும் தட்டுப்பாடு” ஏற்பட்டால் கையிருப்பு எண்ணெயைப் பயன்படுத்த அதிபர் மட்டுமே அனுமதி அளிக்க முடியும்.

நடைமுறை சிக்கல்கள் என்பது குகைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் குறைந்த அளவிற்கு மட்டுமே கச்சா எண்ணெயை வெளியில் எடுக்க முடியும். அதாவது அதிபரின் அனுமதி இருந்தாலும், அது சந்தைக்கு வந்து சேர இரண்டு வாரங்கள் ஆகும்.

சொல்லப் போனால், இந்த கச்சா எண்ணெய் அனைத்தும் சுத்திகரிப்பு செய்யப்படாதவை. கார்கள், கப்பல்கள், விமானங்களில் பயன்படுத்துவதற்கு முன்னதாக இதைச் சுத்திகரிப்பு செய்தாக வேண்டும்.

சௌதி அரேபியாவில் தாக்குதல்களைத் தொடர்ந்து கையிருப்பில் இருந்து எடுப்பது பற்றிய பேச்சுக்கான தேவை இன்னும் வரவில்லை என்று திங்கட்கிழமை சி.என்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அமெரிக்க எரிபொருள் துறை செயலாளர் ரிக் பெர்ரி கூறியுள்ளார்.

கடைசியாக 2011இல் இது பயன்படுத்தப்பட்டது. அரபு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமானபோது, எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கலைக் குறைக்க இந்த இடங்களில் இருந்து மொத்தம் 60 மில்லியன் பரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெயை எடுக்க வேண்டிய கட்டாயம் சர்வதேச எரிபொருள் ஏஜன்சி உறுப்பு நாடுகளுக்கு ஏற்பட்டது.

மெக்ஸிகோ வளைகுடா அருகே உப்பு பாதாள குகைகளில் அமெரிக்கா பல மில்லியன் பரல்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது.

இருந்த போதிலும், சில சமயங்களில் பெருமளவு அமெரிக்கா விற்பனை செய்துள்ளது. 1991இல் வளைகுடா போரின் போது இந்தக் கையிருப்பைப் பயன்படுத்தி அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ் ஒப்புதல் அளித்தார். கத்தரீனா புயல் தாக்கிய போது 11 மில்லியன் பரல்கள் கச்சா எண்ணெயை எடுக்க அவர் மகன்  அனுமதியளித்தார்.

அமெரிக்க எரிசக்தி உற்பத்தி வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இவ்வளவு அதிகமாக கையிருப்பு வைப்பது பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இதை முற்றிலும் கைவிட்டு விடலாம் என்று வோஷிங்டனில் சிலர் பரிந்துரை செய்கின்றனர்.

பெட்ரோல் நிலையங்களில் அமெரிக்க மக்களுக்கு விலையைக் குறைக்க இது உதவும் என்று 2014இல் அரசு பொறுப்புடமை அலுவலகம் கூறியுள்ளது. 2017இல் அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க, கையிருப்பில் பாதியை விற்பது பற்றி ட்ரம்ப் அரசு யோசனையை முன்வைத்தது.

1997இல் பற்றாக்குறையைக் குறைக்கும் நடவடிக்கையாக 28 மில்லியன் பரல்களை அதிபர் பில் கிளிங்டன் அரசு விற்பனை செய்தது.