அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம்; அடித்துக் கூறுகின்றார் விமல் வீரவன்ச

அடுத்த பத்தாண்டுகள் என்பது கோட்டாபய ராஜபக்ஷ தசாப்தம் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்றக்கூடிய காலாவதியாகாத உறுப்பினர்களை மக்கள் நாடாளுமன்றுக்கு அனுப்பவேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில் –

“ஓகஸ்ட் 5ஆம் திகதி நடை பெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான மொட்டுக் கூட்டணியே வெற்றி பெறும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. நுவரெலியாவில் காலநிலை மாறலாம். ஆனால், மொட்டை வெற்றி பெறவைக்கவேண்டும் என்ற மக்களின் மனநிலை மாறாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது நாடு மீது பற்றுள்ள தலைவரை மக்கள் தெரிவு செய்தனர். அவர் சிறந்த தேசிய தலைவராகச் செயற்பட்டு வருகின்றார். அவர் ஜனாதிபதியானதால்தான் கொரோனாவைகூட எமது நாட்டில் கட்டுக்குள்கொண்டு வர முடிந்தது.

பழைய ஜோடி இருந்திருந்தால் (ரணில் – மைத்திரிபால) இந்நேரம் நிலைமை மோசமாகியிருக்கும். எனவே, எமக்கு கிடைத்துள்ள சிறந்த தலைவரின் கரங்களைப் பலப்படுத்தவேண்டும். அவருக்குத் தேவையான விதத்தில் அரசொன்றை உருவாக்க வேண்டும்.

அடுத்த 10 ஆண்டுகள் கோட்டாபய தசாப்தமா கும். இந்த நாட்டை கட்டியெழுப்பும் தசாப்தமாகும். அனைத்து இன மக்களையும் அரவணைத்து புதியதொரு யுகத்தை உருவாக்கும் தசாப்தமாக அமையும். எனவே, காலாவதியான அரசியல்வாதிகளை நாடாளுமன்றம் அனுப்பாமல், சிறப்பாக செயற்படக்கூடியவர்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார்.