அடாத்தான விகாரை அமைப்புக்கு எதிரான வழக்கு விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தின் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்தமை தொடர்பான இரண்டாவது வழக்கு விசாரணைகள் இன்று வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

மேதானந்த தேரர் என்ற பௌத்த துறவியால் பாரிய புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டு பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி வழிபாடுகளுக்கு சென்ற மக்களோடு முரண்பட்ட நிலையில் குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிசாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந் நிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில்  குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு இன்னமும் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை எனவும் இந்நிலையில் ஆறாம் மாதம் ஆறாம் திகதி இரு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த துறவி மற்றும் பௌத்த துறவி சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த விடயம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் (10.06.2019) அன்று வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இன்றைய தினம் (26.08.2019) இரண்டாவது வழக்கு விசாரணைகள் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகிறது.

செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் ,ஆலய நிர்வாக சபையினர் கலந்துகொண்டுள்ளனர்.