விடுதலை உணர்வை விதைக்கவில்லையெனில் அது தமிழ் சமூகத்திற்கு நாம் செய்யும் துரோகம்(நேர்காணல்)-அரியம்

விடுதலை உணர்வை எமது இளைஞர்களிடம் விதைத்து  தமிழுர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வுகிடைக்கும் வரையில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்ற விடயத்தினை நாங்கள்கூறாமல் விடுவோமாகவிருந்தால் அது தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செய்யும் துரோகமாகவேஇருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இலக்கு வாராந்த இதழுக்கு வழங்கிய நேர்காணலியேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் வழங்கிய நேர்காணலின் முழு வடிவம் வருமாறு:

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மீது பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ்மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கரிசனைகொள்ளவில்லையென்ற குற்றசாட்டுகள்முன்வைக்கப்படுகின்றதே, இது தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை தொடர்ச்சியாக பல்வேறுபட்ட விமர்சனங்கள்எல்லோராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றன. 2009ஆம் ஆண்டு மேமாதம் 18ஆம்திகதியிலிருந்து இன்று வரையான பத்துவருட காலப்பகுதியில் தான் இவ்வாறான விமர்சனங்கள்முன்வைக்கப்படுவதும் அதற்கான பதிலை நாம் வழங்கவேண்டியதுமாக இருக்கின்றது. ஏனென்றால் 2009ஆம் ஆண்டிற்கு முன்னதான காலப்பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்பணி இருக்கவில்லை.

2010ஆம் ஆண்டு முதல் இன்றுவரையான காலப்பகுதியில் பல்வேறுபட்ட பணிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செய்திருக்கின்றது. திருகோணமலை, வன்னி போன்ற பகுதிகளில் பல்வேறு காணி விடுவிப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியின் காரணமாகமேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது உண்மையாகும்.

2010ஆம் ஆண்டு 246ஆக இருந்தஅரசியல் கைதிகளின் எண்ணிக்கை தற்போது 94ஆக குறைந்து படிப்படியாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். எனினும் முழுமையாக  அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பது உண்மையாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் இருந்துவருகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் நியாயமானதாக நாங்கள் பார்க்கின்றோம். இராணுத்தாலும், படையினராலும் அழைத்துச் செல்லப்பட்ட தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என அவர்கள் கேட்கின்ற கேள்விக்கு பதிலை வழங்காமல்அரசாங்கம் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச ரீதியிலான ஒரு காரியாலயம் அமைத்து அதன்மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கானமுயற்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்தது. ஏனையவர்களும் எடுத்திருந்தனர்.

ஆனால் அந்த முயற்சியை தொடர்ந்து செய்ய முடியாமலிருக்கின்றது. ஏனென்றால் காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அவ்வாறானதொரு காரியாலயத்தை அமைத்து காலத்தை இழுத்தடிக்கத் தேவையில்லை, எங்களுக்கான நீதியை தரவேண்டும், அவர்களை அழைத்துச்சென்றவர்களே மீள அவர்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைதொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தக் கேள்விக்கான சரியானபதிலை வழங்கக்கூடியவர்கள் தற்போது அரசாங்கத்தில் இருப்பவர்களாவர்.

காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களின்போது மகிந்த அவர்கள் ஜனாதிபதியாக பதவிவகித்தபோது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தவர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆவார். அவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார். ஆகவே அவர் இதற்கான பொறுப்பை ஏற்று பதிலை கொடுக்க வேண்டும்.

கேள்வி: தமிழ் அரசியல் கைதிகளின் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென்ற ஆதங்கம் மக்களிடம் உண்டு.இது தொடர்பில் உங்கள் கருத்த என்ன?

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் காத்திரமான நடவடிக்கையினை எடுத்தது. ஆனால்ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அன்றைய அரசாங்கமோ அதனைகவனத்தில் கொள்ளவில்லையென்பதே உண்மை. அரசியல் கைதிகள் விடயத்தில் இரண்டு மூன்றுவிடயங்கள் உள்ளன.

தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல் கைதிகள், சந்தேகத்தின் பேரில்விசாரணைகளில் இருக்கின்ற அரசியல் கைதிகள் என்று உள்ளர். இதில் அரசியல் கைதியான செல்வகுமார் மகேந்திர என்னும் அரசியல் கைதியினை விடுதலைசெய்யவேண்டிய தார்மீக பொறுப்புஜனாதிபதிக்கு இருந்தது. ஆனாலும் அதனை அவர் செய்யவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புஅதற்கான தொடர்ச்சியான அழுத்தங்களை வழங்கிவந்தது. 244 அரசியல் கைதிகள் இருந்தார்கள். இன்று 94 மாற்றம்பெற்றுள்ளது. அதற்கான கணிசமான பங்களிப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பு படிப்படியாக செய்துவந்தது.

இலங்கையினை பொறுத்தவரையில் ஆட்சியதிகாரத்திற்கு வரும் ஜனாதிபதிகளின்மனோநிலையென்பது தொடர்ச்சியாக இனவாத நிலையினைக் கொண்டதாகவே இருந்துவருகின்றது. ஆயுதம் ஏந்தி ஒரு இனத்திற்காக போராடியவர்களை பயங்கரவாதிகளாக சித்திரிக்கப்படுவதனால் அவர்களை விடுதலைசெய்வதனால் தமது வாக்கு வங்கி குறைந்துவிடுமோ என்ற மனோநிலையினை கொண்டிருப்பதனால் அவர்களை விடுதலைசெய்வதில் பின்னடிப்புகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கேள்வி: தமிழ் அரசியல் கைதி மகேந்திரனின் மரணத்திற்கு பின்னராவது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமிழ் கட்சிகளிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கின்றதா?

பதில்: சிறைச்சாலையில் உயிரிழந்த இறுதி மரணமாக மகேந்திரனின் மரணத்தினை நாங்கள் பார்க்கின்றோம்.ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்ட அரசியல்கைதிகள் விடுவிக்கமுடியும். ஏனைய சந்தேக நபர்களாகவுள்ளவர்களின் வழக்குகளை துரிதப்படுத்தி விடுவிக்கமுடியும். அதற்கான நடவடிக்கைகளையும் தமிழரசுக்கட்சியில் இருக்ககூடிய சட்டத்தரணிகள் முன்னெடுத்துவருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்என்.கே.சுமந்திரன் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக பல நடவடிக்கைகளைமுன்னெடுத்துவந்தார்.

மகேந்திரனின் இறப்புக்கு பின்னரும் தமிழ் அரசியல் கைதிகளின்விடுதலை தொடர்பில் இன்றைய அரசாங்கத்துடன் பேசுவதற்கான முயற்சிகளை தமிழ் தேசியகூட்டமைப்பு முன்னெடுத்துவருகின்றது. அதனை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வார் என்பதை நாங்கள் பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

கேள்வி:  கிழக்கு மாகாணத்தில் காவல் நிலையம் தாக்கப்பட்டு காவல்துறையினர் கொல்லப்பட்டசந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவரே இன்று மரணமடைந்த அரசியல் கைதி மகேந்திரனாகும். ஆனால் அந்த காவல் நிலையங்கள் மீதான தாக்குதல்களை வழி நடாத்தியதாக கருதப்படும் கருணா போன்றவர்கள் இன்று சுதந்திரமாக இருக்கின்றனர். இவ்வாறான நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் உண்மை நிலைகள் தென்னிலங்கையில் உள்ள மக்களிடமும் அரசியல் தலைவர்களிடமும் ஏன் கொண்டுசெல்லப்படவில்லை.?

பதில்: அன்று கிழக்கில் 600 சிறீலங்கா காவல்துறையினர் கடத்தப்பட்டது. அன்று விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரனின் காலத்தில்தான். அக்காலத்தில் மகேந்திரன் இருந்தாரா இல்லையா அல்லது திட்டமிடப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டரா என்றகேள்வியுள்ளது.நாங்கள் அறிந்தவரையில் அவர் சுற்றிவளைப்பு ஒன்றில் கைதுசெய்யப்பட்டு பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு,அரசாங்கத்திற்கு காட்டிக் கொடுத்துக்கொண்டு யாராவது இருப்பார்களென்றால் சட்டங்கள் அவர்களை மறைக்கின்றது. அவ்வாறு செய்யாத அப்பாவிகள் இவ்வாறு தண்டனை பெறுகின்றார்கள். கட்டளையிட்ட விநாயகமூர்த்தி முரளிதரன் சுதந்திரமாக திரியும்போது அப்பாவிகளுக்கு தண்டனை வழங்கப்படுகின்றது. இதனையே இனவாத நடவடிக்கைகளாகபார்க்கப்படுகின்றது. இதனையே இந்த நாட்டின் அரசாங்கங்கள் செய்துவருகின்றது.

பாராளுமன்ற அமர்வுகளில் நாங்கள் இது தொடர்பில் வெளிப்படையாக கூறியிருக்கின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் இவ்வாறான பிரசாரங்களை கொண்டுசெல்வது குறைந்தளவிலேயே நடைபெற்றுள்ளது. சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஊடாக இது கொண்டுசெல்லப்பட்டாலும் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் இவை கொண்டு செல்லப்படவில்லையென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். இருந்தபோதிலும் இந்த நாட்டில் என்ன நடந்துள்ளது என்பது இன்று பெரும்பாலான சிங்கள மக்களுக்கு தெரியும்.

கேள்வி:  தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கத்தில் அது இன்று பயணிக்கின்றது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டபோது வடகிழக்கில் 70வீதமான நிலப்பரப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் அரசியல் ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற செயற்பாடுகளை முன்னெடுத்தது. அந்த பணியை அக்காலத்தில் சரியான முறையில் முன்னெடுத்தது. 2009ஆம் ஆண்டுவரையில் அந்த வேலைத்திட்டங்கள் சமாந்தரமான முன்னெடுக்கப்பட்டன.போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் முழு பணிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கைகளில் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு பின்னர்தான் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பல திசைகளில் இருந்த விமர்சனங்கள் இன்று ஓரு திசையில் வந்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். நாங்கள் என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும் சர்வதேசத்தின் செயற்பாடுகளுக்கு ஏற்ப எங்களை மாற்றவேண்டிய நிலையிருக்கின்றது. முடிவுகளை எடுக்கும்போது சில தாமதங்கள் பின்னடைவுகள் ஏற்படுகின்றது.

கேள்வி:  யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடகிழக்கில் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் அருகிவருவதாகவும் அதற்கான முழுப்பொறுப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தொடர்பில் என்ன கூற விரும்புகின்றீர்கள்?

பதில்: 2015ஆம் ஆண்டுவரையில் வடகிழக்கில் தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகள் உணர்வுரீதியாக இருந்தன. பல தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடகிழக்கில் தமிழ் மக்கள் அமோக ஆதரவினை வழங்கியிருந்தனர். 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் நல்லாட்சி என்ற மகுடத்துடன் வந்த ஆட்சியில் எதிர்கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்துசெயற்பட்டதன் காரணமாகவே இவ்வாறான ஒரு கருத்து இருந்துவருகின்றது.

வடகிழக்கினை பொறுத்தவரையில் அபிவிருத்தி தேவையானது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கோரியபோது அவர்கள் உணர்வுகளை இழந்துவிட்டார்கள், உரிமைகளை விட்டுவிட்டார்கள் சுயநிர்ணய உரிமையினை விட்டுவிட்டு அபிவிருத்தி அரசியலுக்கு செல்கின்றார்கள், அமைச்சு பதவிக்கு ஆசைப்படுகின்றார்கள் போன்ற விடயங்கள் வெளிவந்தன. இவ்வாறான விடயங்கள் இளைஞர்கள் மத்தியில் ஊட்டப்படுகின்றது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தோற்றம்பெற்ற இளைஞர்கள் இன்று இவ்வாறான நிலைகளுக்கு உட்படும் நிலையேற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு கொள்கையில் இருந்து விலகிவிட்டதா என்ற கேள்வியெழுகின்றது.

விடுதலை தொடர்பான வழிநடத்தல்களை மேற்கொள்வதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தாமதமடைந்துள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். விடுதலை உணர்வை எமது இளைஞர்களிடம் விதைத்து  இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் வரையில் நாங்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்ற விடயத்தினை நாங்கள் கூறாமல்விடுவோமாகவிருந்தால் அது தமிழ் சமூகத்திற்கு நாங்கள் செய்யும் துரோகமாகவே இருக்கும் என்பதாகவே நான் கருதுகின்றேன்.